Wednesday 18 July 2012

வட்டியில்லாக் கடன்... கறுப்புக் குல்லா!



யேசுதாஸ் நல்லவரா?
டி.வி-க்கள்... நாளிதழ்கள்... தொடர்ந்து பார்க்கிறவர்கள் அந்த மனிதர் முகத்தைப் பார்க்காமல் இருந்திருக்க முடியாது!
கறுப்புக் குல்லா, கறுப்புக் கண்ணாடி, மிகப் பெரிய புன்னகையுடன் சுவரொட்டிகளில், செய்தித் தாள்களில், தொலைக்காட்சியில் நாள்தோறும் காட்சி தரும் அந்த மனிதரின் பெயர் ஐ.பி.யேசுதாஸ். உற்சாகமாகத் தோன்றி கவர்ச்சிகரமான விளம்பரங்கள் தந்து அசத்துகிறார். அவர் நடந்து வரும்போது பெண்கள் பூ போட்டு வரவேற்கிறார்கள். வட்டியே இல்லாமல் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்குக் கடன், வீட்டுக்கடன், தொழில்கடன், வெளிநாடுகளுக்குச் சுற்றுலா செல்வதற்குக் கடன் என்கின்றன அந்த விளம்​பரங்கள். ''அடுத்து கட்சி ஆரம்பிக்கப்போகிறார்'' என்றும் சிலர் பீதியைக் கிளப்புகிறார்கள். யார் இந்த யேசுதாஸ்?
'அப்ரோ மைக்ரோ ஃபைனான்ஸ்’ நிறுவனத்​தையும் அதன் உரிமையாளரான அந்த ஏழைப்  பங்காளரையும் பற்றி நமக்குக் கிடைத்த தகவல்கள் எல்லாமே முன்னுக்குப் பின் முரணாகவேஇருந்தன.
கடன் வழங்கும் நிறுவனங்களுக்கான விதிமுறைகள் குறித்து வங்கி அதிகாரி ஒருவரிடம் கேட்டோம். ''கடன் வழங்கும் நிறுவனங்​களை நடத்த ரிசர்வ் வங்கியில் அங்கீகாரம் பெற்றிருக்க வேண்டும். கடன் தருபவர் யார்? கடன் வழங்க பணம் எங்கிருந்து வருகிறது என்பதும் மிகமுக்கியம். நீங்கள் குறிப்பிடும் அப்ரோ மைக்ரோ ஃபைனான்ஸ் என்ற நிதி நிறுவனம், ரிசர்வ் வங்கியின் அங்கீகாரம் பெற்ற நிறுவனங்களின் பட்டியலில் இல்லை. எனவே, அவர்களின் பாதை தவறானது என்பது முதலில் தெளிவாகிறது.
மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு வழங்கப்படும் மைக்ரோ ஃபைனான்ஸ் என்பதை, நுண்கடன் என்று சொல்லலாம். இப்படிப்பட்ட நுண்கடன் வழங்கு​வதற்கு, ரிசர்வ் வங்கி ஏராளமான விதிமுறைகளை வகுத்​துள்ளது. அதன்படி, கடன் வழங்கும் நிறுவனத்தின் நிகரமதிப்பு (பங்கு மூலதனம் உட்பட) 5 கோடி ரூபாயாக இருக்க வேண்டும். மேலும், கடன் என்றாலே அதில் வட்டி இருக்க வேண்டும். வட்டி இல்லை என்றால், அதை முன்பணம் அல்லது கைமாற்று என்றுதான் சொல்ல முடியும். இதை ஒரு மைக்ரோ ஃபைனான்ஸ் நிறுவனம் செய்ய முடியாது. ஆனால், அப்ரோ மைக்ரோ நிறுவனம் வட்டி இல்லாத கடன் வழங்குவதாக விளம்பரம் செய்கிறது. இது முற்றிலும் தவறான உதாரணம். மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு வழங்கப்படும் கடன்களுக்கு வரையறை உள்ளது. அதிகபட்சமாக அதில் ஒரு உறுப்பினருக்கு 50 ஆயிரம் மட்டுமே வழங்க முடியும். அதுவும் வேறு எந்தக் கடனும் அவர் பெயரில் இல்லாதபோதுதான் அதையும் வழங்க முடியும். ஆனால் அப்ரோ நிறுவனம், ஆறு லட்சம் முதல் 33 லட்சம் வரை கடன் வழங்குவதாகச் சொல்கிறது. இது முறையற்றது. வட்டி இல்லா சுற்றுலாக் கடன் என்பதெல்லாம் இதுவரை யாரும் கேள்விப்படாதது. இது ஏமாற்று வேலையாக இருக்கவே அதிக வாய்ப்பு உள்ளது. ரிசர்வ் வங்கி உடனடியாக இதைக் கண்காணித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்றார்.
ரிசர்வ் வங்கி அதிகாரி ஒருவரைத் தொடர்பு கொண்டோம். ''அந்த நிறுவனத்தின் செயல்பாடுகள் எங்கள் கவனத்​துக்கு வந்துள்ளது. எங்களுடைய ஸ்பெஷல் டீம், அந்த நிறுவனத்தைத் தொடர்ந்து  கண்காணித்து வருகிறது. விரைவில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்'' என்றார்.
மகளிர் சுய உதவிக்குழுப் பயனாளிகள் என்ன சொல்கிறார்கள்?
பூந்தமல்லி நாசரேத் பேட்டையில் உள்ள சாய் மகளிர் சுய உதவிக் குழு உறுப்பினர்களிடமும், வேலூர் அழகாபுரத்தைச் சேர்ந்த அன்னை தெரசா மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்களிடமும் பேசினோம். ''இதற்காக ஏஜென்ட் ஒருத்தர் இருக்​கிறார். அவர் மாசத்துல ஒருநாள் மட்டும்​தான் வருவார். எங்களுடைய விவரங்கள், ரேஷன் கார்டு ஜெராக்ஸ், ஒரு பிளாங்க் செக் ஆகியவற்றை வாங்கிக்கொண்டு எங்களுக்குக் கடன் கிடைக்க ஏற்பாடு செஞ்சார். கடன் கிடைச்​சா, அதில் அஞ்சு முதல் பத்து பெர்சன்ட் வரை அவருக்கு கமிஷன். கடன் வாங்க​ணும்னா, அப்ரோ நிறுவனத்தில் மெம்பர் ஆகணும். அதுக்கு 2,500 ரூபா கட்டணும். வட்டி இல்லாக் கடன் எல்லாம் கிடையாதுங்க. 100 ரூபாய்க்கு 50 பைசா வட்டி வாங்குறாங்க'' என்றனர்.
அப்ரோவைப் பற்றி எங்கே யாரிடம் விசாரித்​தாலும், வினோதமான தகவல்கள். அதன் நிறுவனர் ஐ.பி.யேசுதாஸைச் சந்திக்க முயற்சித்தோம். நீண்ட போராட்டத்துக்குப் பின் தொலைபேசியில் அவரைப் பிடித்தோம். ஆனால், 'நான் யேசுதாஸின் பி.ஏ. சதீஷ் பேசுறேன்' என் றது அந்தக் குரல். ''சார் இப்போ அவுட் ஆஃப் ஸ்டேட். அவர்கிட்ட நேரடியாப் பேச முடி​யாது. இப்போ பேட்டி கொடுக்கும் ஐடியா​வும் இல்லே. நெக்ஸ்ட் மன்த் ட்ரை பண்ணுங்க'' என்றார். மேற்கொண்டு பேச முயன்ற நம்மிடம், ''எனக்கு நிறைய வொர்க் இருக்கு. நான் இவ்ளோ நேரம் யார்கிட்டயும் பேசியதில்லை.'' என்றவர், ''என் னோட நம்பர் உங்களுக்கு எப்படிக் கிடைச்சது?'' என்று கேட்டுவிட்டு தொலை​பேசி இணைப்பைத் துண்டித்து விட்டார்.
யேசுதாஸ், கவனிக்கப்பட வேண்டிய மனிதர்தான்!

குட்பாய் விமலன் ப்ளேபாய் அகிலன்-டபுள் ட்ரீட் மாற்றான்!


''ஓ.கே... இப்ப கொஞ்சம் பேசி டலாம். எனக்கே யார்கிட்டயாவது சொல்லி டணும்னு தவிக்குது. 'மாற்றான்’ல சூர்யா ஒட்டிப் பிறந்த இரட்டையர்கள். 'கான்ஜாயிண்ட் ட்வின்ஸ்’னு (Conjoined twins) சொல்வாங்க. ஒரே உடம்பு... ரெண்டு மனசு. குணாதிசயங்களும் எதிரெதிர் துருவங்களா இருக்கும். டெக்னிக்கலா ரொம்ப சேலஞ்ஜிங்கான கதை. கிராஃபிக்ஸ் பெர்ஃபெக்ட்டா இருக்கணும். கொஞ்சம் அசந்தாலும் ஏமாத்திரும். சூர்யாவின் இன்னொரு தலையை கம்ப்யூட்டர்ல ஜெனரேட் பண்ணணும். அதில் உயிர் இருக்கணும். எல்லாத்துக்கும் மேலே நீங்க நம்பணும். சூர்யாவுக்கு நாலு கை, நாலு கால், இரண்டு தலை... நல்லா இருக்குல்ல!'' - கண்களின் ரியாக்ஷன் பார்க்கிறார் கே.வி.ஆனந்த். 'மாற்றான்’ படத்துக்காக பிரமாண்ட உழைப்பு கொட்டிய அயர்ச்சி யைத் தாண்டியும் வார்த்தைகளில் கொப்பளிக்கிறது குதூகலம்.
 ''எங்கே பிடிச்சீங்க இந்த ஐடியாவை?''
'' 'சிவாஜி’க்காக 'ஒரு கோடி சன்லைட்’ பாட்டு ஷூட் பண்ணிட்டு நானும் ஷங்கர் சாரும் ஃப்ளைட்டில் வந்துட்டு இருந்தோம். அப்போ நேஷனல் ஜியாக்ரஃபி பத்திரிகை யைச் சும்மா புரட்டிட்டு இருந்தேன். அதுல பத்து பக்கத்துக்குத் தாய்லாந்தில் ஒட்டிப் பிறந்த குழந்தைகளைப் பத்தின ஸ்டோரி இருந்தது. மனசுக்குள் மின்னல். இந்தியா வந்து இறங்கினதும் அப்படியான குழந்தைகளைத் தேடினால், ஆச்சர்யத் தகவல்களா கொட்டுது. அப்படியே அதை நூல் பிடிச்சுட்டே போனா, செம சினிமாவுக்கான கதை. ரொம்ப பாசிட்டிவ் எண்ணங்கள் உள்ளவனா ஒருத்தனும் வசதி தந்த திமிரால் தடம் மாறியவனா ஒருத்தனும் இருக்காங்க. நிஜத்திலும் அப்படிப் பல ட்வின்ஸ் இருக்காங்க. ஒரே உடம்புல ரெண்டு மனசு!''
''சூர்யாவையே மலைக்கவைக்கிற உழைப்பு தேவைப்படுமே... சமாளிச்சாரா?''
''பின்னிட்டார்! மூணு படங்கள்ல கொட்ட வேண்டிய வேலையை இதில் கொடுத்திருக்கார். 'அயன்’ சமயமே இந்தக் கதையை அவர்கிட்ட சொன்னேன். கேட்டுக்கிட்டார். நான் 'கோ’ முடிச்சதும் 'என்ன ட்வின்ஸ் கதையை இப்போ கையில் எடுக்கலாமா’னு கேட்டார். நிறைய ஹோம் வொர்க் பண்ணிட்டுக் கிளம்பிட்டோம்.
ட்வின்ஸ் சூர்யாவுக்கு அகிலன், விமலன்னு பேர். இதுல விமலன் ரொம்ப நல்ல பையன். கவிதை எழுதுவான், எல்லாருக்கும் உதவி பண்ணுவான், வடைதான் பிடிக்கும், பொய் சொல்ல மாட்டான். அகிலன் அப்படியே ஆப்போசிட். பீட்டர் இங்கிலீஷ், பீட்ஸா பார்ட்டி, டேட்டிங் இளைஞன். விமலன் குட்பாய்னா, அகிலன் ப்ளேபாய். ரெண்டு பேருக்குமான வித்தியாசத்தை நல்லா உள்வாங்கிட்டு, பிரமாதமா பெர்ஃபார்ம் பண்ணார். ஒரே சமயத்துல ரெண்டு அவதாரம் எடுத்த மாதிரி நடிச்சிருக்கார். காமெடிக்குனு யாருமே இல்லை. அதுக்கும் சூர்யாதான் பொறுப்பு!''
'' 'மாற்றான்’, 'துப்பாக்கி’... ரெண்டும்தான் களத்தில் நேருக்கு நேர் மோதுது. இதில் சூர்யா-விஜயைத் தாண்டி, கே.வி.ஆனந்த்-ஏ.ஆர்.முருகதாஸ் போட்டியும் இருக்கே?''
''விஜய் மாஸ் நடிகர். முருகதாஸ் கிளாஸ் இயக்குநர். 'மாற்றான்’, 'துப்பாக்கி’... ரெண்டுமே நல்ல விஷயம்தான். ஒரு ரசிகனா நான் 'துப்பாக்கி’யை எதிர்பார்க்கிறேன். ஆனா, என் 'மாற்றான்’ அவங்களுக்கு எந்தவிதத்திலும் குறையாமல் ரொம்பவே நல்லா இருக்கும்!''
''சட்டுனு பார்த்தா தமிழ் சினிமாவின் 'கமர்ஷியல் கில்லி’ இயக்குநர்களில் உங்களுக்குப் பிரதான இடம்... என்ன மேஜிக் பண்ணீங்க?''
''அதுக்கெல்லாம் சின்ன வயசுல நான் படிச்சு வளர்ந்த புத்தகங்கள்தான் காரணம். கற்பனை யைத் தூண்டும் 'இரும்புக் கை மாயாவி’, 'துப்பறியும் சாம்பு’வோட ரசனையை உயர்த்திய தமிழ்வாணன், சுஜாதா இவங்களுக்கும் அதில் பங்கு இருக்கு. நான் வேலை பார்த்த ப்ரியதர்ஷன், ராஜ்குமார் சந்தோஷி, ஷங்கர், வஸந்த், கதிர் இவங்க எல்லோரும் ஸ்கிரிப்ட்டுக்கு முக்கியத்துவம் கொடுப்பாங்க. நான் இவங்க எல்லாருக்கும் முதல் அசிஸ்டென்டா நின்னேன். அவங்க பிரச்னையை என்கிட்ட பகிர்ந்துக்கிட் டாங்க. நான் விளம்பரத்தைப் பாடமா படிச்சிருக்கேன். இப்பெல்லாம் முதல் நாள் தியேட்டருக்கு வந்து பார்க்கிறவங்க வயசு 25-க்கு உள்ளேதான் இருக்கு. மத்தவங்க சீரியல், டி.வி.டி-னு செட்டில் ஆகிடுறாங்க. எந்தப் பொருளை யாருக்கு விக்கிறேங்கிறதுல தெளிவா இருக்கேன். அதேசமயம் இலக்கியம், இலக்கணம் எல்லாம் தாண்டி சினிமா பணம் பண்ணுற விஷயம். அதிலும் நான் தெளிவா இருக்கேன். என்னோட ஸ்பெஷாலிட்டியா நான் நினைக்கிறது... எதிலும் கொஞ்சம் லாஜிக் சேர்த்துடுறது!''
''ரஜினிக்குக் கதை சொன்னீங்கன்னு சொன்னாங்களே?''
''கதை சொல்றதுக்காக நான் ரஜினியைச் சந்திக்கவே இல்லை. ரஜினி தங்கமானவர். நான் பயப்படுறது அவரோட ரசிகர்களுக்காக. நான் ரஜினி சாரைச் சமாளிச்சுருவேன். ஷூட்டிங்ல தன் குடையைத் தானே பிடிச்சுக்குவார். ஆனா, அவர் ரசிகர்கள் எதிர்பார்ப்பைச் சமாளிக்க... எனக்கு இன்னும் பயிற்சி வேணும்!''

Wednesday 11 July 2012

நான் ஈ

நான் ஈ. விமர்சனம்


சயின்ஸ் ஃபிக்‌ஷன் படங்கள் தமிழில் ரொம்ப குறைவுதான்.. ஷங்கரின் எந்திரன் ரஜினி நடிச்சதால அந்த சயின்ஸ் ஃபிக்‌ஷன் பிரமிப்பு ரஜினியின் ஸ்டார் வேல்யூ முன்னால பெரிசா பேசப்படலை.. எஸ் ஜே சூர்யா நடிச்சு டைரக்ட் செஞ்ச நியூ படம் சயின்ஸ் ஃபிக்சன்ல இருந்து கொஞ்சம் விலகி கில்மா பட ரேஞ்சுக்கு போயிடுச்சு.. அதனால தெலுங்குல Eega என்ற பெயரில்  ரிலீஸ் ஆகும்  ஃபேண்டசி வகைப்படமான நான் ஈ ரொம்ப பெரிய எதிர்பார்ப்பு..


 படத்தோட ஒன்லைன் ரொம்ப சிம்ப்பிள்.. ஹீரோ ஹீரோயின் 2 பேரும் லவ் பண்றாங்க.. வில்லன் ஹீரோவை கொலை பண்ணிடறார்.. ஹீரோ ஈ ஆக மறு ஜென்மம் எடுக்கறார்.. எப்படி வில்லனை பழி வாங்கறார் என்பதுதான் கதை..

இனி திரைக்கதை.. ஓப்பனிங்க்லயே வில்லன் தான் அறிமுகம்.. அதுல இருந்தே படத்தோட முக்கியத்துவம் வில்லனுக்கு தெரிஞ்சுடுது.. வில்லன் எந்த மாதிரி ஆள்னா சிம்புவுக்கு அண்ணன், அர்ஜூனுக்கு பாஸ், கார்த்திக்கிற்கு தாதா, எஸ் ஜே சூர்யாவுக்கு குரு ,  கமலுக்கே வழி காட்டி  சுருக்கமா சொல்லனும்னா பொண்ணுங்களை கரெட்க் பண்றதுல மன்னன்.. அதுதான் அண்ணனுக்கு மெயின்  ஜாப்பே.. அது போக நேரம் இல்லாதப்போ ஏதொ தொழில் பண்ணிட்டு தானும் ஒரு தொழில் அதிபர்னு ஊர்ல சொல்லிட்டு திரியறார்..

ஹீரோயின் அம்மா, அப்பா இல்லை, அண்ணி கூட தங்கி இருக்கா.. எதிர் வீட்ல ஹீரோ.. எப்போ பாரு அவ பின்னாலயே ரவுண்டிங்க்.. பாப்பாவுக்கு அது தெரியும்.. பிடிச்சிருக்கு.. ஆனாலும் பிகு பண்ணிட்டு அவனை அலைய விட்டு ரசிக்குது..

 எல்லா சங்கடங்கள், ஈகோவை விட்டு ஹீரோ கிட்டே  ஹீரோயின் லவ்வை சொல்ற டைம் அந்த அசம்பாவிதம் நடக்குது.. அதாவது வில்லன் ஹீரோயினை கணக்கு பண்ண பார்க்கறான்.. ஏதோ சமூக சேவை நிறுவனத்துக்கு டொனேஷன் கேட்க வந்த ஹீரோயினுக்கே 15 லட்சம் தர்றான்.. பாப்பா சம்பளமே  ஒரு படத்துக்கு 40 லட்சம் தான்.. வில்லனுக்கு ஹீரோயின் லவ் தெரிஞ்சுடுது.. தனக்கு இடஞ்சலா வந்த ஹீரோவை டக்க்குன்னு போட்டுத்தள்ளிடறான்..

 ஹீரோ ஒரு ஈயா மறு ஜென்மம் எடுத்து வர்றார்.. இந்த ஐடியா எப்படி வந்திருக்கும்னா ஹீரோ பேரு நிஜ வாழ்விலும் நானி = நான்  + இ  . ஒரு சாதாரண ஈ எப்படி வில்லனை பழி வாங்க முடியும்? அவனை டார்ச்சர் பண்ண முடியும்? கொலை பண்ண முடியும்? அதுக்குத்தான் திரைக்கதை, கம்ப்யூட்டர் கிராஃபிக்ஸ் அட்டகாசமா பண்ண ஒரு டீம் இருக்கே.. எப்படி பழி வாங்குது என்பதே மீதிக்கதை..

படத்தோட  முதல் ஹீரோ சி ஜி ஒர்க் தான்.. சமீப காலமா பலர் சொதப்பி வந்த கம்ப்யூட்டர் கிராஃபிக்ஸை இவங்க முறையா, ரசிக்கும்படி, ஓவர் பில்டப் எல்லாம் பண்ணாம செஞ்சிருக்கறதால  ரசிக்க முடியுது.. குறிப்பா அந்த ஈ டிசைன் அட்ட்டகாசம்.. அது டான்ஸ் ஆடுவது, சைகை காண்பிப்பது எல்லாம் அருமை.. 

வில்லன் தான் அடுத்த ஹீரோ..KITCHA SUDEEP . வில்லன் சுதீப் கன்னடத்தில் ஏறக்குறைய சுப்ரீம் ஸ்டார் . படம் முழுக்க இவர் ராஜ்யம் தான்.. ஒரு ரகுவரனோ, பிரகாஷ் ராஜோ செய்ய வேண்டிய கலக்கலான கேரக்டர்.. நல்லா பண்ணி இருக்கார்.. நல்ல எதிர்காலம் உண்டு..

 ஹீரோ நானி சித்தார்த்தின் முகச்சாயல், ஜீவாவின் நடிப்புச்சாயல் என கலந்து கட்டி அடிக்கறார்.. படம் போட்ட 30 வது நிமிடமே அவர் கொலை செய்யப்படுவதால் சான்ஸ் கம்மி./. வந்தவரை ஓக்கே..

 ஹீரோயின் சமந்தா  அழகு.. கண்ணியமான உடைகளில் கவுரமாக வந்து போறார்.. ஆல்ரெடி கலரா இருக்கும் அவர் எதுக்கு ரோஸ் பவுடர் அள்ளி பூசிட்டு வர்றார்? தெரியலை..  சோகமான காட்சிகளில் கூட அதே மேக்கப்.. முப்பத்து நான்கு தேவர்கள் வந்தாலும் அவர்களை கட்டிப்போடும் அழகு..

பேண்டசி வகையில் ரசிக்கத்தக்க படம், ஆல் கிளாஸ் ஆடியன்ஸையும் கவரும்.. குழந்தைகள், பெண்கள் ரசிக்கும்படிதான் படம் இருக்கு..  காஞ்சனாவை தூக்கி சாப்பிடும்னு சொன்னாங்களே அந்த அளவு இல்லை.. ஆனாலும் படம் ஹிட்  தான்.. சந்தானம் ஒரே ஒரு சீனில் 2 நிமிடம் மட்டுமே வர்றார்

டாப்ஸிக்காக 'காதல்' பைட்!

டாப்ஸிக்காக 'காதல்' பைட்!

ரீல் அல்ல ரியல்!
டாப்ஸிக்காக நடந்த கும்மாங்குத்து இது!
கடந்த 8-ம் தேதி இரவு, சினிமா நட்சத்திரங்களுக்கு தன்னுடைய லாயிட்ஸ் ரோடு பங்களாவில் பார்ட்டி கொடுத்தார் ஃபைனான் சியர் பிரதாப்தானே. அந்த விருந்தில் நடிகை டாப்ஸி, மோகன் பாபுவின் மகன் மனோஜ், மகள் லட்சுமி மஞ்சு ஆகியோர் ஜாலியாக பேசிக்கொண்டு இருந்தார்கள். அந்த நேரம், தயாநிதி அழகிரியின் நண்பர் 'மங்காத்தா’ மஹத் விசிட் செய்தார். மனோஜுடன் பேசிக்கொண்டு இருந்த டாப்ஸியிடம் போய் காதல்மொழி பேசி இருக்கிறார். உடனே, ஆத்திரமான மனோஜ் ப்ளஸ் நண்பர்கள் மஹத்தின் மீது பாய்ந்து அடித்துத் துவைத்திருக்கிறார்கள். காயம் அடைந்த மஹத்,  ராயப்பேட்டை போலீஸ் ஸ்டேஷனுக்குப் போய், மனோஜ் அவரது அக்கா லட்சுமி மஞ்சு ஆகியோர் மீது புகார் கொடுக்க... கோலிவுட், டாலிவுட் பற்றி எரிகிறது.
என்னதான் நடந்ததாம்? இரண்டு தரப்புக்கும் பொதுவானவர் களிடம் பேசினோம். ''தயாநிதி அழகிரி, 'ஆடுகளம்’ படத்தைத் தயாரித்தபோதே மஹத் - டாப்ஸி காதல் பூத்தது. இருவரும் ஒன்றாகவே ஊர் சுற்றினர். கல்யாணம் செய்துகொள்ளும் அளவுக்கு டாப்ஸியை வெறித்தனமாக நேசித்தார் மஹத். டாப்ஸிக்காகத்தான், நடிக்கும் முயற்சியில் இறங்கினார் மஹத். அஜீத் நடித்த 'மங்காத்தா’ படத்தில் பிரேம்ஜியுடன் நடித்தார். டாப்ஸி தெலுங்குப் படத்தில் பிஸியான பிறகும், அடிக்கடி ஹைதராபாத் பறந்து தனது காதலை டெவலப் செய்தார் மஹத். ஒரு கட்டத்தில் மஹத்தின் அதீத அன்பே டாப்ஸிக்கு அவஸ்தையாகவே, உறவைத் தவிர்க்கத் தொடங்கினார்.
அப்போது, மனோஜுக்கு ஜோடியாக டாப்ஸி ஒரு தெலுங்குப் படத்தில் நடித்தார். அவருடன் கிசுகிசு பரவியது. அதனால் அந்தப் படப்பிடிப்பில் மஹத் அடிக்கடி போய் தொந்தரவு செய்தார். ஒரு கட்டத்தில், 'மஹத் என்னை ரொம்பவும் தொந்தரவு பண்றார்’ என்று மனோஜிடம் டாப்ஸி புகார் சொன்னார். அந்த ஷூட்டிங்கில் வைத்தே மஹத்தைக் கடுமையாக உதைத்து அனுப்பி விட்டார் மனோஜ். நடந்ததைச் சொல்லி தயாநிதி அழகிரியிடம் அழுது இருக்கிறார், மஹத். 'நான்தான் அப்பவே சொன்னேன்ல நடிகை பின்னால சுத்தாதேன்னு... நீ என்னவோ தெய்வீகக்காதல்னு பினாத்தினே...’ என்று கண்டித்தார். அதன்பிறகும் மஹத்துக்கு டாப்ஸி மேல் இருக்கும் மோகம் தீரவில்லை.
இந்த நேரத்தில்தான் சென்னையில் நடந்த பார்ட்டிக்கு டாப்ஸி வந்திருக்கும் தகவல் தெரியவர, அங்கு ஆஜராகி காதல் மொழி பேசி இருக்கிறார் மஹத். கடுப்பான மனோஜ் மீண்டும் கைவரிசையைக் காட்டிவிட்டார்...'' என்றார்கள்.
போலீஸில் புகார் செய்யப்பட்டு இருப்பது குறித்து 'வாலு’ படப்பிடிப்பில் இருந்த நண்பன் சிம்புவிடம் செல்போனில் புலம்பி இருக்கிறார், மனோஜ். அதனால் இப்போது, தயாநிதி அழகிரியிடம் பேசி போலீஸ் புகாரை வாபஸ் வாங்கச் செய்யும் முயற்சியில் இருக்கிறார் சிம்பு.
மீண்டும் கோடம்பாக்கத்தில் காதல் ரகளை ஆரம்பமாகி விட்டது!

Sunday 1 July 2012

வருகிறார் ஆர்த்தி... அலறும் நித்தி...



காக்களோடு கொடைக்கானலில் இருக்கிறார் நித்தியானந்தா. கடுமையான குளிரிலும் வியர்த்துக் கொட்டுகிறதாம் நித்திக்கு. காரணம் கர்நாடக சி.ஐ.டி. போலீஸார் கையில் இருக்கும் ஆர்த்தி ராவின் வாக்குமூலம்.
'நித்தியால் 40 முறை கற்பழிக்கப்பட்டேன்’ என்று ஓப்பன் பேட்டி தந்த ஆர்த்தி ராவின் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்ட பக்கங்களின் எண்ணிக்கை 43. அவர் சொல்லி இருக்கும் காம சமாச்சாரங்கள்,  ஒரு 'பலான’ புத்தகத்தைப் போன்று அங்குலம் அங்குலமாக விரிகிறது. அந்த வாக்குமூலம் முழுவதும் நிர்வாண வார்த்தைகள் மிக அதிகம். அதை அப்படியே வெளியிட முடியாது என்பதால் நாகரிகத் தமிழில் தருகிறோம்.
அமலா (எ) ஆர்த்தி ராவ் (எ) மா நித்ய பிரமேஸ்வரி மாயி!
43 பக்கங்கள் கொண்ட ஆர்த்தி ராவின் வாக்குமூலத்தில் தன்னைப் பற்றியும், சென்னையில் இருக்கும் தன் குடும்பத்தைப் பற்றியும், அமெரிக்காவில் இருக்கும் தன் கணவர், வேலை பற்றி எல்லாம் சொல்லி இருப்பது மூன்றே பத்திகள்தான்.அதன் பிறகு ராமகிருஷ்ண பரமஹம்சரைப் பிடிக்கும், விவேகானந்தரைப் பிடிக்கும், அதனால் நித்தியானந்தரைத் தேடி 2004-ல் வந்ததாக அறிமுகம் வாசிக்கிறார். அதன் பிறகு அரங்கேறியவை எல்லாம் 'ஏ’ சர்டிஃபிகேட் காட்சிகள்.
முதல் சந்திப்பு!
''2004 தொடக்கத்தில் ஆசிரமத்தில் சேர்ந்தாலும் டிசம்பரில்தான் நித்தியுடன் நேரடி சந்திப்பு ஏற்பட்டது. முதல் சந்திப்பிலேயே என்னிடம் தன்னை மறந்து நிறைய நேரம் பேசினார். என்னுடைய குடும்பம், கணவர், மனப்பிரச்னைகளை எல்லாம் அவரை குருவாக நினைத்துக் கொட்ட ஆரம்பித்தேன். தனிப்பட்ட வாழ்க்கையும், ஆன்மிக வாழ்க்கையையும் எப்படிப் பிரித்தாள வேண்டும், அதற்கு எந்தெந்த வழிமுறைகளைக் கையாள வேண்டும் என்று சொன்னார். 'என்னுடைய பிரச்னைகளுக்கு எல்லாம் அருமருந்து ஜீவன் முக்திதான்’ என்று என் கைகளைப் பிடித்து அழுத்திச் சொன்னார். 'ஜீவன் முக்திக்குத் தயாராக இருக்கிறாயா?’ என்று கேட்டதும்,  என்னை மறந்து 'தயார்’ என்றேன். அதில் இருந்துதான் அத்தனையும் ஆரம்பம்'' என்று தொடங்குகிறார் ஆர்த்தி ராவ்.
நித்தியின் வியாக்கியானம்
''குடும்ப வாழ்க்கையில் ஏற்பட்ட சிக்கலால்தான் நான் ஆசிரமத்துக்கு வந்தேன். இங்கே வந்து சன்னியாசி வாழ்க்கை வாழ்ந்த பிறகு, எனக்குக் குடும்ப வாழ்க்கையின் மீது பிடிப்பு ஏற்பட்டது. அதுநாள் வரை சண்டை போட்டு பிள்ளை பெறுவதைத் தள்ளிப் போட்டுக் கொண்டே போன நான், தாய்மை அடைய விரும்பினேன். அதன் பிறகு சென்னையில் கொஞ்ச நாட்கள் கணவருடன் வாழ்ந்து தாய்மை அடைந்தேன். அதனை வீட்டில் உள்ள அனைவரும் பெறும் பேறாகக் கொண்டாடினோம். இதனை என்னுடைய குருவிடம் சொல்லி ஆசி பெற வேண்டும் என்று பிடதிக்குப் போனேன். 2005-ம் ஆண்டு ஜனவரி முதல் வாரத்தில் பிடதி போனேன். அப்போது, 'குடும்ப வாழ்க்கையில் இருந்து கொண்டு ஜீவன் முக்தி அடைய முடியாது. அதனால் கர்ப்பத்தைக் கலைத்து விடு’ என்றார்.
'எனக்குத் தாய்மையும் அடைய வேண்டும், ஜீவன் முக்தியும் அடைய வேண்டும். அபார்ஷன் செய்வது குற்றம் இல்லையா? இதற்காக என்னுடைய கணவரி டம் அனுமதி கேட்க வேண்டும். உங்கள் பேச்சைக் கேட்டு அபார்ஷன் செய்து விட்டால், அவருக்கு எப்படி பதில் சொல்வேன்?’ என்று கேட்டேன்.
'அபார்ஷன் குற்றம் இல்லை. குழந்தை பிறப்பதற்கு சில மணித் துளிகளுக்கு முன்னர்தான் உடலோடு 'ஆன்மா’ இணைகிறது. அதனால் உடலைக் கொல்தல் பாவம் அன்று. ஆன்மாவைக் கொல்வதுதான் பாவம். நீ உடலைத்தானே கொல்லப் போகிறாய்’ என்றார். குருவின் பேச்சைக் கேட்டு, பிப்ரவரி முதல் வாரத்தில் கருவை கலைத்தேன். ஆனால் என் கணவரிடம், 'கர்ப்பம் தானாகவே கலைந்து விட்டது’ என்று பொய் சொன்னேன். எனக்குப் பிடித்த தாய்மையை நித்திக்காக இழந்தேன்'' என்று கதறுகிறார்.
நீதான் எந்தன் தேவி!
2005 ஜனவரி மாத இறுதியில் நித்தி ஒருநாள், 'என்னோடு சேலத்துக்கு வருகிறாயா?’ என்று கேட்டார். 'யாருக்கும் கிடைக்காத அதிர்ஷ்டம் உனக்குக் கிடைத்து இருக்கிறது. குருவே உன்னை அழைக்கிறார்’ என்று அவரது சீடர் சதானந்தா சொல்லவே கிளம்பினேன். சேலத்தில் ஜெய்ராம் என்ற பக்தரின் வீட்டில் முதல் தளத்தில் நித்தி தங்கி இருந்தார். அப்போது நித்தியின் பர்சனல் செகரட்டரியாக இருந்த ராகினி, 'நீ சுவாமிக்கு பெர்சனல் சேவை செய்யப் போ’ என்று என்னை மேல் தளத்துக்கு அனுப்பினார். 'இது உனக்குக் கிடைத்த பாக்கியம்’ என்றும் சொன்னார். நித்திக்கு இரவு உணவு பரிமாறிவிட்டு நின்று கொண்டிருந்தேன். அவர் சாப்பிட்டு முடித்த உடன் கால்களை அமுக்கச் சொன்னார். அழுத்தினேன். பிறகு கதவைத் தாழிடச் சொன்னார். குருவிடம் ஏன் என்று கேள்வியே கேட்கக் கூடாது என்பதால் அதையும் செய்தேன். கதவைத் தாழிட்டு திரும்பும் போது நித்தி என்னை இறுக்கமாக அணைத்து உதட்டில் முத்தமிட்டார். அதிர்ச்சியுடன் என்னுடைய எதிர்ப்பை தெரிவித்த போது, 'நீ என்னை முக்தி பெற்ற குருவாக நினைக்கிறாயா?’ என்று கேட்டார். 'ஆமாம்’ என்றேன். 'இப்போது உன்னையும் ஜீவன் முக்தி அடையச் செய்யப் போகிறேன். அதற்காக நான் எப்படி வேண்டுமானலும் நடந்து கொள்வேன். நீ அதனை முழு சம்மதத்தோடு அனுபவிக்க வேண்டும். ஏனென்றால் ஜீவன் முக்தி அடைய இதுதான் ஒரே வழி. இது வேத காலம் தொட்டு கடைப்பிடிக்கும் வழக்கம்’ என்று என்னை முழுமையாக மூளைச் சலவை செய்தார்.
'இப்போதுதான் நீ முழுமையான தேவியாக மாறி இருக்கிறாய். என்னிடம் இருக்கும் சிவன் சக்தி உன்னிடம் வந்திருக்கிறது. இனி நீ ஜீவன் முக்தி அடைவாய். நீ குருவுக்குச் செய்திருக்கும் இந்த மஹா சேவைக்கு நன்றி. இனி நீ தான் எந்தன் தேவி’ என்று சொல்லி என்னை முத்தமிட்டார். அதன் பிறகு ஏற்பட்ட மனக் குழப்பத்தில் நான் அனுபவித்த வேதனையைச் சொல்லில் அடக்க இயலாது'' என்கிறார்.
ஆனந்தேஷ்வரா... ஆனந்தேஷ்வரி!
''2005 ஜனவரி 20-ம் தேதியில் இருந்து பிப்ரவரி 23-ம் தேதி வரை நித்தி ஏற்காட்டில் கிராண்ட் பேலஸ் ஹோட்டலில் தங்கி, வகுப்புகளை நடத்தினார். எனக்குச் சரியான தேதி தெரியவில்லை. வேண்டும் என்றே என்னை அறைக்கு வரவழைத்து இன்பத்தில் ஈடுபடுவார். நான் மறுக்கும் போதெல்லாம், 'நான் ஆனந்தேஷ்வரன்... நீ ஆனந்தேஷ்வரி என்பதை உணர்ந்து நடந்து கொள். இது காமம் அல்ல. கடவுளை அடையும் வழி. என் அன்பைப் பெற்ற நீ பேறு பெற்றவள்’ என்பார். என் உடலால் மட்டுமின்றி மனதாலும் மீறி சிந்திக்கவே இயலாத வண்ணம் நித்தி என்னை ஆக்கிரமித்து இருந்தார். இதற்கு சாட்சி என்னுடைய தந்தை மற்றும் யோகா டீச்சர் வீணா ஜெயராம்''
நீ என் தாய் (எ) மாயி
''என்னைத் தேவியாகச் சித்திரித்து பல முறை இயற்கைக்கு முரணான வகையிலும் உறவு கொண்ட நித்தி, செயின்ட் லூயிஸ் நகரத்தில் இருக்கும் போது என்னை, 'மாயி’ (தாய்) என்று அழைத்தார். 'என்ன சுவாமி என்னோடு இருந்து விட்டு இப்படி அழைக்கிறீர்கள்?’ என்று கேட்டேன். அதற்கு, 'ஒரு பெண் தாயாகவும் தாரமாகவும் மாறக் கூடியவள். கட்டிலில் மட்டும் நீ தாரமாக இரு. மற்ற இடங்களில் நீ என் தாய். அப்போதுதான் அன்பு அதிகம்’ என சொல்லிக் கொண்டே முத்தமிட்டு என்னை வெறுமனே விழுங்கினார்.''
போதை ஏற்றிய நித்தி
''2006-ம் ஆண்டு ஆகஸ்ட் முதல் டிசம்பர் வரை பிடதி ஆசிரமத்தில் தங்கி இருந்தேன். ஒரு நாள் அவர் அறையை சுத்தம் செய்து கொண்டிருந்த போது, பீரோவில் இருக்கும் ஆல்கஹாலை எடுத்து வரச் சொன்னார். பீரோவில் காவி உடைகளுக்கு அடியில் இருந்த மதுவை எடுத்து வந்தேன். ஆசிரமச் சட்டப்படி மதுவைப் பயன்படுத்துவது தவறு. ஆனால் குருவே சொல்லும் போது தட்ட முடியாது. அதில் தண்ணீரே சேர்க்காமல் அப்படியே குடித்தார். ஆச்சர்யமாகப் பார்த்த என்னுடைய வாயிலும் ஊற்றினார். துப்பினேன். ஆனால் மீண்டும் ஊற்றி என்னைக் குடிக்க வைத்தார். ஒரு கட்டத்தில் போதை தலைக்கேறி வாந்தி எடுத்தேன். சுய நினைவில்லாமல் அவரது அறையிலேயே படுத்து விட்டேன். காலையில் தெளிந்து எழுந்தபோது உடையின்றிக் கிடந்தேன்.''
வாரணாசியில் தாசி
''நித்தியுடன் 3.11.2006-ல் வாரணாசிக்கு ஆன்மிகச் சுற்றுலாவுக்குச் சென்று இருந்தேன். நித்தியை விஷ்வம் ஹோட்டலில் தங்க வைத்து விட்டு, நானும் மற்றவர்களும் ஹோட்டல் பிளாசாவில் தங்கி இருந்தோம். இரவு 2 மணி இருக்கும் போது கோபமாக நுழைந்த ராகினி, 'உடனே நித்தியின் அறைக்கு போ’ என்று என்னிடம் சொன்னார். அறையில் நுழைந்ததும், 'என்னை ஏன் தனியாக விட்டுப் போனாய். உன்னை தேவி என்று சொல்கிறேனே?’ என்று கோபமாகத் திட்ட ஆரம்பித்தார். எவ்வளவோ மன்னிப்புக் கேட்டும் அவர் கோபம் அடங்கவில்லை. பிறகு பணி விடைகள் புரிந்த பிறகு சமாதானம் ஆனார். வாரணாசியில் இருக்கும் போது ஒரு நாள் என்னை, 'தாசி’ என்று சொல்லி அணைத்தார். அப்போது, 'தேவி, தாய் என சொல்லிவிட்டு இப்போது தாசி என சொல்கிறீர்களே?’ என்று கோபப்பட்டேன். 'தாசிதான் இறைவனுக்கு உண்மையான தேவையைப் பூர்த்தி செய்வாள். தாயினும் சிறந்தவள். நீ என் தாசி’ என்றார். ஏதாவது காரணம் கேட்டால், தன்னுடைய ஜீவன் முக்தி புத்தகத்தின் பக்கங்களைச் சொல்லியே விளக்குவார். அதே போன்று கொலம்பஸில் தங்கி இருந்த போதும் நித்தி, என்னை தாசி என்றே அழைத்தார். பிறகு வழக்கம் போன்று என் விருப்பம் இல்லாமலே அனுபவித்தார்.''
கிளாமர் உடைகள், ஆணுறை
''2006-ம் ஆண்டு மே மாதம் லாஸ் ஏஞ்சல்ஸ் நகருக்குப் போய் இருந்தோம். அப்போது நித்தி வழக்கமாக அணியும் காவி உடைகளைக் களைந்து விட்டு ஜீன்ஸ், டீ-ஷர்ட், ரேபான் கிளாஸ் அணிந்து கொண்டு என்னோடு ஊர் சுற்றுவார். ஒருநாள் விநய் பரத்வாஜிடம் நைட் கிளப்புக்கு அழைத்துச் செல்லுமாறு கூறி என்னையும் உடன் அழைத்துச் சென்றார். அங்கே சாமியார் என்பதை மறந்து, ஆட்டம் போட்டார். அதன் பிறகு ஹோட்டல் அறைக்கு வந்தவுடன் எனக்கு பாலியல் டார்ச்சர் கொடுத்தார். அதற்கு இணங்க மறுத்தால், 'உன் ஈகோவைத் தூக்கி போடு. அப்போதுதான் ஜீவன் முக்தி’ என்பார். அப்படி ஒருநாள், 'நான் சொல்வதைச் செய்வாயா?’ என கேட்டவர், 'போய் கிளாமரான உடைகள் அணிந்து செர்ரி கலர் லிப் ஸ்டிக் போட்டு வா. ஆணுறையும் எடுத்து வா. அதுதான் எனக்குப் பிடிக்கும். வா, செக்ஸ் மெடிட்டேட் செய்ய வேண்டும்’ என்று கூறி என்னை அனுபவித்தார். அதே போன்று அமெரிக்காவில் சிவ யோக தாண்ட‌வம், என்று சொல்லியும் என்னை அனுபவித்தார்.''
கும்ப மேளாவில் சில்மிஷம்!
2007 ஜனவரியில் அலகாபாத்தில் கும்பமேளா நடைபெற்றது. அப்போது ராகினிக்கு உடல் சரி இல்லாததால் சித்ரா நரங், லெனின் கருப்பனுடன் நானும் நித்தியோடு போனேன். அங்கு முழுக்கத் தங்கியது டென்ட்டில்தான். ஒரு மதியப் பொழுதில் நித்தி என்னை அவரது டென்ட்டுக்கு வரச் சொன்னதால் போனேன். அங்கும் என்னைக் கட்டியணைத்து, முத்தமிட்டு இயற்கைக்கு முரணாக செக்ஸ் கொண்டார். 'ஸ்வாமி நீங்கதானே இந்த இடத்தை உலகத்திலேயே புனிதமான இடம் என்று சொன்னீர்கள். நாம் இங்கே இப்படிச் செய்வது அதன் புனிதத் தன்மையை கெடுப்பது போல் ஆகிவிடாதா?’ என்று கேட்டேன். 'புனிதமான இடத்தில் உறவு கொண்டால்தான் விரைவில் ஜீவன் முக்தி அடைய முடியும். நீ இப்போது செய்யும் சேவை உன் ஜீவன் முக்தி மட்டுமல்ல, உன் குருவின் சக்தியையும் கூட்டும்’ என்று சொன்னார்.''
சேடிஸ்ட் மாதிரி அடித்தார்!
''2007 ஏப்ரலில் அமெரிக்காவில் உள்ள வேதிக் கோயிலைத் திறக்க நித்தியோடு போயிருந்தேன். இனியும் நித்திக்கு அடிபணியப் போவதில்லை என்ற மன உறுதியோடு நடந்து கொண்டேன். என்னை ஹோட்டல் அறைக்கு அழைத்து, 'உனக்கு அறிவிருக்கா? ஜீவன் முக்தி அடையும் நேரத்தில் இப்படி நடந்து கொள்கிறாயே’ என்று ஆரம்பித்து அதுவரை கேட்டு இராத கெட்ட வார்த்தைகளால் காறி உமிழ்ந்தார். அப்போதும் அடி பணிய மறுத்ததால், என்னை அறைந்தார். அதன் பிறகு வலுக்கட்டாயமாக என்னைப் பலவந்தப்​படுத்தி னார். அவரது ஆசைக்கு ஒப்புக் கொள்​ளாமல் போனால் சேடிஸ்ட் போன்று அடிப்பார். இதனை பல முறை ஆசிரமத்தி லேயே பார்த்​திருக்கிறேன்''
125 ஆண்டு வாழ்வேன்!
''நீண்ட நாட்களுக்குப் பிறகு 2007 டிசம்பர் 31-ம் தேதி பிடதி ஆசிரமத்துக்கு வந்தேன். ஏனென்றால் நித்தியானந்த ஜெயந்தி (பிறந்த நாள்) மற்றும் குரு பூர்ணிமா விழா நடைபெறும். அப்போது அவர் என்னை அழைத்து, 'நீதான் என்னுடைய உண்மை யான தேவி. வா ஜீவன் முக்தி அடையலாம்’ என்று கூறி அனுபவித்தார்.  அதே போன்று 2008 டிசம்பரில் வந்தபோதும் அவ்வாறே செய்தார்.  என்னோடு செக்ஸ் கொண்ட பிறகு, 'இதுதான் தேவி தரிசனம். நான் இப்படியே இருந்தால் 125 ஆண்டு வரை வாழ்வேன். உன்னையும் வாழ வைப்பேன். இப்படியே ஒவ்வொரு பிறந்த நாளின் போதும் என்னோடு இரு’ என்றார்''
விநய் பரத்வாஜைக் கற்பழித்தார் நித்தி!
''நித்தியின் செய்கையால் மனசு ரொம்பவே நொந்து போய் கொஞ்ச நாள் இருந்தேன். பல முறை தற்கொலைக்கு முயற்சி செய்தேன். அதன் பிறகு மீண்டும் ஆசிரமத்தில் இருந்து நித்தி அழைத்ததால் 2009-ம் ஆண்டு அமெரிக்க டூருக்குத் தயாரானேன். அப்போது அமெரிக்காவில் இருக்கும் சீடரான விநய் பரத்வாஜ், 'உன்னிடம் தவறாக நடந்து கொள்கிறாரா?’ என்று கேட்டார். விநய் பரத்வாஜை அவ்வளவாக தெரியாது என்பதால், 'இல்லை’ என மறுத்து விட்டேன். அப்போது விநய், 'என்னை பல முறை கெடுத்து விட்டார்’ என்று அழுதார். அதன் பிறகு எனக்கு நேர்ந்ததைச் சொல்லி அழுதேன். பிறகு அவர்தான் லெனினிடம் சொல்லி அழ, வீடியோ செட் பண்ணும் திட்டம் ரெடி ஆனது. அதன் பிறகு நிகழ்ந்ததை உலகமே அறியும்'' என்று ஆர்த்தி ராவ் சி.ஐ.டி. போலீஸில் விலாவாரியாகச் சொல்லி இருக்கிறார்.
ஆர்த்தி ராவின் வாக்குமூலம் படு வலிமையாக இருந்தாலும், நித்திக்கு எதிராக இன்னும் நிறைய புகார்களை எதிர்பார்க்கிறது கர்நாடக போலீஸ். அதனால் இதுவரை நித்தியிடம் பெர்சனல் செகரட்டரியாக இருந்த பெண்களின் பட்டியலும், மாண்புக் குரிய அம்மா பட்டம் பெற்ற பெண்களின் பட்டியலையும் கையில் வைத்துக் கொண்டு தேடி வருகிறது. இதை அறிந்துகொண்ட நித்தி தரப்பும் எதிராளிகளை ஆஃப் பண்ணுவதில் மும்முரமாக இருக்​கிறார்கள். மா நித்ய கோபிகாவின் கேரள வீட்டிலும் சி.ஐ..டி போலீஸ் விசார​ணையைத் துவங்கி இருக்​கிறார்கள்.
'ஆண்மை பரிசோதனை, முழு உடல் பரிசோதனை, ரத்தப் பரிசோதனை, குரல் சோதனைக்காக ஆஜராக வேண்டும்’ என்று ராம்நகர் கோர்ட் கடந்த வாரம் நித்திக்கு உத்தரவு போட்டது. இதனைத் தொடர்ந்து  பெங்களூரு விக்டோரி​யா மருத்துவமனையில்  நித்தியைப் பரிசோதிக்க டாக்டர் மாதவ் ராஜு தலைமையில் ஐந்து மருத்துவர்கள் தயாராக இருக்கிறார்கள். அநேகமாக நித்திக்கு அடுத்த வாரம் பரிசோதனைப் படலம் ஆரம்பமாகலாம். அதற்குள் மருத்துவர்களை வளைக்கும் வேலையை நித்தி குரூப் ஆட்கள் செய்து வருகிறார்களாம்.
தூசு தட்டப்படும் கென்னடியின் மர்ம மரணம்
இதுவரை மகளிர் வழக்குகளில் மட்டுமே சிக்கிய நித்தி மீது இப்போது ஒரு கொலைப் புகாரும் வர வாய்ப்பு இருக்கிறது என்கிறார்கள். பெங்களூருவில் நித்திக்கு எதிராக கன்னட அமைப்புகளை ஒருங்கிணைத்து வரும் ஸ்பந்தனா மகளிர் அமைப்பைச் சேர்ந்த வீணா, ''நித்தி ஆசிரமத்தில் கென்னடி என்பவர் 2004-ம் ஆண்டு மர்மமாக இறந்து போனார். மாடியில் இருந்து விழுந்து இறந்து விட்டார் என்று அதனை விபத்தாக மூடி மறைத்து விட்டார்கள். அது  கொலையாக இருக்கலாம். அதனால் தீவிரமாக விசாரிக்க வேண்டும். சி.ஐ.டி. போலீஸில் அந்த வழக்கையும் இணைத்து விசாரிக்கச் சொல்லி இருக்கிறோம். அது மறுக்கப்பட்டால் நீதிமன்றத்தை நாடுவோம்'' என்றார்.
கென்னடியின் மர்ம மரண வழக்கை பிடதி போலீஸ் தூசு தட்ட ஆரம்பித்து இருப்பதால்,
இப்போதே பிடதியில் புகைவாசம்!

பரிதாபத்தில் ராமஜெயம் வழக்கு!





ராமஜெயம் வழக்கு சி.பி.சி.ஐ.டி. போலீ சுக்கு மாறப்போகிறது என்ற தகவல் கிடைத்ததும் சிரித்​தவர்​கள்தான் அதிகம்!
ராமஜெயம் கொலை வழக்கை மூன்று மாதங்​களாக டீம் டீமாக... டிசைன் டிசைனாக... விசாரித்துப் பார்த்தும் எந்த உருப்படியான துப்பும் கிடைக்காமல், திணறிக்கொண்டே இருந்தார்கள், திருச்சி போலீஸார். மீண்டும் மீண்டும் விசாரிக்கப்பட்டதால் திருச்சி தி.மு.க. பிரமுகர்களும் பேஸ்தடித்துக்கிடந்தனர். இந்த நிலையில் வழக்கு விசாரணை சி.பி.சி.ஐ.டி. கைகளுக்கு மாறவே, 'மறுபடியும் முதல்ல இருந்தா..?’ என்று அலறுகிறார்கள் ஏற்கெனவே போலீஸிடம் வறுபட்டவர்கள்.
ஜூன் 26-ம் தேதி மாலை திருச்சி சி.பி.சி.ஐ.டி. டி.எஸ்.பி.​மலைச்சாமிக்கு சென்னை தலை​மை அலுவலகத்தில் இருந்து, 'ராம​ஜெயம் கொலை வழக்குத் தொடர்பான ஆவணங்களை திருச்சி மாநகர போலீஸிடம் போய் வாங்கிக்​​​கொள்ளுங்கள்’ என்று திடீர் உத்தரவு வந்தது. அதன்படி 1,500 பக்கங்கள்கொண்ட ஆவணங்களை வாங்கிக்கொண்டார் டி.எஸ்.பி. மலைச்சாமி.
மறுநாள் காலை, சென்னையில் இருந்து சி.பி.சி.ஐ.டி. ஐ.ஜி. மஞ்சுநாதா, டி.ஐ.ஜி. ஸ்ரீதர், எஸ்.பி. ராஜேஸ்வரி ஆகியோர் தனித்தனி கார்களில் புறப்​பட்டு திருச்சிக்கு வந்து சேர்ந்தனர். ராமஜெயம் உடல் கிடந்த இடத்தைக் காட்டும் வரைபடத்தைக் கையில் எடுத்துக்கொண்டு, காலை 11.30 மணிக்குக் கிளம்பியது படை. திருவளர்ச்சோலை பகுதியில், ராமஜெயம் உடல்கிடந்த இடத்தை வரைபட உதவியுடன் தேடிக்கொண்டே இருந்தனர். அதன் பிறகு பத்திரிகையாளர்கள் உதவி செய்த பிறகுதான், இடத்தை அடையாளம் கண்டார்கள். அங்கிருந்து காரில் கிளம்பி, ராமஜெயம் வாக்கிங் செல்லும் பாதைகளை ஒரு ரவுண்ட் அடித்தனர். அடுத்து, மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தை நோக்கி பயணித்தனர். அங்கு கமிஷனர் சைலேஷ் குமார் யாதவை சந்தித்துப் பேசினார்கள்.
மன்னார்புரம், காஜாநகர் பகுதி​யில் வாடகை வீட்டில் சி.பி.சி.ஐ.டி. அலுவலகம் கடந்த ஆண்டு முதல் இயங்கிவருகிறது. ராமஜெயம் கொலை வழக்கை விசாரிக்கக் கூடுதல் போலீஸ் தேவை என்பதால், மத்திய மண்டலத்தில் உள்ள ஐந்தாறு மாவட்டங்களைச் சேர்ந்த சி.பி.சி.ஐ.டி. போலீஸார் மாற்றப்பட்டு இருந்​தனர். அவர்கள் உட்காரக்கூட இடம் இல்லாமல் தெருவில் அலைந்து​கொண்டு இருந்ததுதான் பரிதாபம்.
மாலை 4 மணிக்கு சி.பி.சி.ஐ.டி. அலுவலகத்தில் பத்திரிகையாளர்கள் சந்திப்பு. ''எங்கள் வசம் தமிழகம் முழுக்க 114 வழக்குகள் உள்ளன. எங்களால் கண்டுபிடிக்க முடியாத வழக்கு என எதுவும் கிடையாது. ராமஜெயம் கொலை வழக்கைக் கண்டுபிடிக்க காலக்கெடு எதுவும் நிர்ணயிக்கவில்லை. நிர்ணயிக்கவும் முடியாது. திருச்சி போலீஸ் எங்களிடம் ஒப்படைத்துள்ள 1,500 பக்க ரிப்போர்ட்டை முழுமையாகப் படித்த பிறகு, இந்த வழக்கின் விசாரணையைத் தொடங்குவோம். புதுக்கோட்டை முத்துக்குமார் கொலை வழக்கு, திண்டுக்கல் டாக்டர் பாஸ்கரன் கொலை வழக்கு, மதுரை வாடிப்பட்டி சிறுமி நரபலி வழக்கு ஆகியவற்றில் சிறப்பாக துப்புத் துலக்கியதுபோன்று, ராமஜெயம் கொலைக் குற்றவாளிகளையும் கண்டிப்பாகப் பிடித்துவிடுவோம்'' என்ற ஐ.ஜி. மஞ்சுநாதாவிடம், ''திருச்சியில் வையம்பட்டியில் நடந்த துரைராஜ், அவரது கார் டிரைவர் கொலை வழக்கு மற்றும் மணிகண்டத்தில் நடந்த துரைராஜின் அண்ணன் தங்கவேல் கொலை வழக்கு ஆகியவை ஐந்து ஆண்டுகளாக சி.பி.சி.ஐ.டி-யால் துப்புத் துலக்கப்படாமல் இருக்கிறதே?'' என்று கிடுக்கிப்பிடி போட்டனர் நிருபர்கள்.
''அந்த வழக்குகளையும் தீவிரமாக விசாரித்துவருகிறோம். எப்படியும் குற்றவாளிகளைப் பிடித்துவிடுவோம்'' என்று சமாளித்து முடித்தார்.
திருச்சி போலீஸ் கிளப்பில் தங்கியுள்ள சி.பி.சி.ஐ.டி. எஸ்.பி. ராஜேஸ்வரி, சிவில் சர்வீஸ் தேர்வுக்குப் படிப்பதுபோல் திருச்சி மாநகரப் போலீஸ் கொடுத்துள்ள அறிக்கையைப் படித்துவருகிறாராம். டி.எஸ்.பி. மலைச்சாமியை தலைமைப் புலனாய்வு அதிகாரியாகக்கொண்டு, அவருக்கு கீழ் ஐந்து இன்ஸ்பெக்டர்கள் தலைமையில் டீம்கள் அமைக்கப்பட்டு உள்ளன. அவர்கள் எஸ்.பி-யின் உத்தரவுக்​காகக் காத்திருக்கிறார்கள்.
''போலீஸ் கூப்பிடும்போதெல்லாம் விசாரணைக்​குப் போகவேண்டும் என்பதால், எங்களால் கடந்த மூன்று மாதங்களாக நல்லது கெட்டதுகளில் கலந்துகொள்ளக்கூட வெளியூர் போகமுடியவில்லை. இனி, சி.பி.சி.ஐ.டி. டீமும் எங்களது தூக்கத்தைக் கெடுக்கத்தான்போகிறது'' என்ற முணுமுணுப்பு ராம​ஜெயத்துக்கு நெருக்கமானவர்கள் வட்டாரத்தில் ஒலிக்கிறது.
திருச்சி போலீஸ் நிம்மதிப் பெருமூச்சுவிட, சி.பி.சி.ஐ.டி. திருதிருவென விழிக்கிறது. ஏற்கெனவே, 'சி.பி.ஐ. விசாரணை கேட்போம்’ என்று மு.க.ஸ்டாலின் சொன்னார். ஒருவேளை சி.பி.ஐ-க்கு இந்த வழக்கு மாறினால்... அவங்களும் இப்படித்தான் வருவாங்க! விசாரிப்பாங்க! பேட்டியும் கொடுப்பாங்க!