Saturday 31 March 2012

டிரை பண்ணலாமே-உலர்ந்த திராட்சை


                                                 


திராட்சை! நினைக்கும்போதே இனிக்கும் பழங்களில் ஒன்று. இவற்றில் கறுப்பு திராட்சை, பச்சை திராட்சை, பன்னீர் திராட்சை, காஷ்மீர் திராட்சை, ஆங்கூர் திராட்சை, காபூல் திராட்சை, விதையில்லா திராட்சை என பல வகையுண்டு.

குழந்தைகள் வளர்ச்சிக்கு, இரத்த விருத்திக்கு, உடல் வலி குணமாக, கர்ப்பிணிப் பெண்களுக்கு, மாதவிலக்குக் காலங்களில் பெண்களுக்கு, மலச்சிக்கல் தீர, குடல்புண் ஆற, இதயத் துடிப்பு சீராக, சுகமான நித்திரைக்கு…. என்று இதன் பயனை அடுக்கிக்கொண்டே போகலாம்.

இந்த பழங்களை உலரவைத்து எடுக்கப்படும் உலர்ந்த திராட்சையை கிசுமுசுப் பழம் என்பார்கள். ஆரம்ப காலத்தில் அயல்நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டு வந்ததால் இதற்கு கிசுமுசுப் பழம் என பெயரிட்டனர்.

பொதுவாக இந்தப் பழத்தை கேக், பாயசம், பிஸ்கட் என்று பலகார வகைகளுக்கு பயன்படுத்தி வருகின்றனர்.

இதில் வைட்டமின் ‘பி’ மற்றும் சுண்ணாம்புச் சத்து அதிகம் நிறைந் துள்ளது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் உகந்ததுதான் இந்த உலர்ந்த திராட்சை. இந்தப் பழம் அதிக மருத்துவக் குணங்களைக் கொண்டது.

குழந்தைகள் வளர்ச்சிக்கு

வளரும் குழந்தைகளுக்கு ஏற்றபழம் இது. எலும்புகள் நன்றாக உறுதியாக வளரவும், பற்கள் வலுப்பெறவும் மற்றும் உடல் வளர்ச்சிக்கும் தேவையான சத்து கால்சியம்தான். கால்சியம் அதாவது சுண்ணாம்புச் சத்து இந்தப் பழத்தில் அதிகம் நிறைந்துள்ளது. இந்தப் பழத்தை இரவு உணவுக்குப் பிறகு 10 பழங்கள் வீதம் எடுத்து பாலில் போட்டு காய்ச்சி பாலையும் பழத்தையும் சாப்பிட்டு வந்தால் குழந்தைகள் ஆரோக்கியமாகவும், பலமாகவும் இருப்பார்கள்.

இரத்த விருத்திக்கு

எலும்பு மஞ்ஜைகளிலிருந்து இரத்தம் ஊறுவதற்கு காய்ந்த திராட்சை மிகவும் உதவுகிறது. இந்தப் பழத்தை எடுத்து வாயில் போட்டு கொஞ்சம் கொஞ்சமாக சாறு இறக்கினால் எலும்பு மஞ்ஜைகள் பலமடைந்து இரத்தம் அதிகம் சுரக்கும். மேலும் இரத்தத்தை சுத்தப்படுத்தி உடலுக்கு புத்துணர்வைக் கொடுக்கும்.

உடல் வலி குணமாக

பெருஞ்சீரகத்தோடு இப்பழத்தை சேர்த்து கசாயம் செய்து அருந்தி வந்தால் உடல் வலி அனைத்தும் தீரும். இந்தப் பழத்தை அவ்வப்போது ஒன்று இரண்டு சாப்பிட்டு வருதல் நல்லது.

கர்ப்பிணிப் பெண்களுக்கு

கருவில் வளரும் குழந்தைக்குத் தேவையான அனைத்து சத்துக்களும் தாயின் மூலம்தான் கிடைக்கும். தாயின் ஆரோக்கியமே முதலில் முக்கியம். அதனால் கர்ப்பிணிப் பெண்கள் உலர்ந்த திராட்சையை பாலில் கலந்து கொதிக்க வைத்து பருகி வந்தால் பிறக்கும் குழந்தை குறையில்லாமல் ஆரோக்கியமாக பிறக்கும்.

மாதவிலக்குக் காலங்களில் பெண்களுக்கு

மாதவிலக்குக் காலங்களில் சில பெண்களுக்கு வயிற்றில் வலி இருந்துகொண்டே இருக்கும். இந்த பிரச்சனை தீர கைகொடுக்கும் மருந்தாக உலர்ந்த திராட்சை பயன்படுகிறது. இந்தப் பழத்தை நீரில் போட்டு காய்ச்சி, கசாயமாக செய்து சாப்பிட்டால் வலி மறைந்து போகும்.

மலச்சிக்கல் தீர

மலச்சிக்கலே நோய் வருவதற்கான அறிகுறியாகும். வயது முதிர்ந்தவர்களுக்கு மலச்சிக்கல் வருவது இயற்கையே. இவர்களின் உடலில் சீரண உறுப்புகள் வலுவிழந்து இருப்பதால்உணவுகள் எளிதில் சீரணம் ஆகாது. இவர்கள் மலமிளக்கி மருந்துகளைச் சாப்பிட்டாலும் இந்தப் பிரச்சனை தீராது. இதனால் மூட்டுவலி, இடுப்பு வலி, தலைவலி என பல உபாதைகள் உருவாகும். இந்தப் பிரச்சனைக்கெல்லாம் அருமருந்தாக இருப்பது உலர்ந்த திராட்சைகளே.

தினமும் படுக்கைக்குச் செல்லும்முன் பாலில் இந்தப் பழங்களைச் சேர்த்து காய்ச்சி அருந்திவந்தால் மலச்சிக்கல் தீரும். மலச்சிக்கலின்றி வாழ்ந்தால் நூறாண்டு நோயின்றி வாழலாம்.

குடல்புண் ஆற

அஜீரணக் கோளாறுகளால் குடலில் உள்ள வாய்வுக்கள் சீற்றம் ஏற்பட்டு குடல் சுவற்றை புண்ணாக்கி விடுகின்றன. இவர்கள் உலர்ந்த திராட்சைப் பழங்களை நீரில் கொதிக்கவைத்து கஷாயம் போல் செய்து அருந்தி வந்தால் குடல் புண்கள் குணமாகும்.

இதயத் துடிப்பு சீராக

சிலருக்கு இதயம் மிக வேகமாகத் துடிக்கும். இவர்கள் எப்போதும் ஒருவிதமான பதட்டத்துடனே காணப்படுவார்கள். இவர்கள் பாலில் இந்தப் பழங்களைப் போட்டு காய்ச்சி ஆறியபின் மறுபடியும் காய்ச்சி, பாலையும் பழத்தையும் சாப்பிட்டு வந்தால் இதயத் துடிப்பு சீராகும்.

சுகமான நித்திரைக்கு

தினமும் படுக்கைக்குச் செல்வதற்கு அரைமணி நேரம் முன்பு பாலில் நான்கு அல்லது 5 காய்ந்த திராட்சையைப் போட்டு கொதிக்க வைத்து வடிகட்டி பாலை அருந்தி வந்தால் சுகமான நித்திரை கிடைக்கும்.

தினமும் உலர்ந்த திராட்சையை சாப்பிட்டு நோயின்றி ஆரோக்கியமாக வாழ்வோம்.

உலர்ந்த திராட்சை உண்போர் கவனத்திற்கு

சளி பிடித்திருக்கும் போதும், காச நோய் உள்ளவர்களும், வாத நோய் உள்ளவர்களும் திராட்சை அல்லது உலர்ந்த திராட்சைக் கொண்டு செய்யப்படும் மருந்துகளை தவிர்ப்பது நல்லது.

உலர்ந்த திராட்சையை பதப்படுத்தும் போது ரசாயன அமிலங்கள் கொண்டு தான் பதப்படுத்துகின்றனர். எனவே உலர்ந்த திராட்சையை அப்படியே பயன்படுத்துவது மிகவும் தவறு.

அதனை நன்றாக கழுவிவிட்டு அல்லது தண்ணீரில் சிறிது நேரம் ஊறவிட்டு பின்னர் நன்கு கைகளால் பிசைந்து கழுவ வேண்டும்.

குழந்தைகளுக்கு உலர்ந்த திராட்சையைக் கொடுக்கும் போதும் நன்கு கவனமாக கழுவிய பின்னரேக் கொடுக்க வேண்டும்.

தினமும் உலர்ந்த திராட்சையை சாப்பிட்டு நோயின்றி ஆரோக்கியமாக வாழ்வோம்.


அர்த்தமுள்ள ஆன்மிக சிந்தனை

சில வழக்கங்கள் எதற்காக?




ஆன்மீகம் சம்பந்தமாக எத்தனையோ செயல்களை தினமும் செய்கிறோம். அதன் பொருள் என்னவென்று கேட்டால் நமக்குத் தெரிவதில்லை. அர்த்தமில்லாத காரியங்கள் உண்மையான ஆன்மீகத்தில் இல்லை. அப்படி அர்த்தமில்லாமல் செயல்கள் இருந்தால் அது உண்மையான ஆன்மீகம் இல்லை. எனவே எதையும் ஏன் செய்கிறோம் என்று தெரிந்து அந்த பாவனையுடன் செய்வதே சிறப்பு.

தீபத்தை ஏன் ஏற்றுகிறோம்?



                                       


தினசரி வீட்டில் தீபம் ஏற்றுகிறோம். மங்கள சடங்குகள், பொது நிகழ்ச்சிகள் கூட தீபம் ஏற்றி விட்டுத்தான் தொடங்கப்படுகிறது. அந்த சடங்குகள், நிகழ்ச்சிகள் முடியும் வரை அந்த தீபம் எரிந்து கொண்டிருக்கும்.

ஒளி அறிவையும், ஞானத்தையும் குறிக்கிறது. இருள் அறியாமையையும், அஞ்ஞானத்தையும் குறிக்கிறது. இறைவனை எல்லா ஞானத்திற்கும் மூலமானவனாகவும், ஒளிமயமானவனாகவும் கருதுகிறார்கள். நமது குடும்பங்களில் அறியாமை என்ற இருளகற்றி ஞானம் என்ற ஒளி பரவ வேண்டும் என்ற எண்ணத்தில் தான் தீபம் ஏற்றுகிறோம். சந்தியா காலங்களான அதிகாலை, மாலை நேரங்கள் பிரார்த்தனைக்கேற்ற காலங்களாக நம் முன்னோர் கருதி வந்ததால் அந்த சமயங்களில் தீபம் ஏற்றி வழிபடுவது நமது வழக்கமாக இருக்கிறது.

எண்ணெய், திரி இரண்டும் ஆன்மீக மார்க்கத்தில் இவ்வுலகத்தில் பற்றை ஏற்படுத்தும் வாசனைகளாகக் கருதுகிறார்கள். தீபம் ஒளிரும் போது எண்ணெயும், திரியும் சிறிது சிறிதாக அழிவது போல், ஞானத்தினால் நம் பற்றுகள் எல்லாம் அழிகின்றன என்றும் ஞானம் அவற்றை அழித்த பிறகே ஓய்கிறது என்றும் தீபம் மூலம் உணர்த்தப்படுவதாக அறிஞர்கள் கருதுகிறார்கள்.

மேலும் தீபத்தின் நெருப்பு மேல் நோக்கியே ஒளிர்கிறது. அது போல உண்மையான ஞானமும் நம்மை மேலான எண்ணங்களுக்கே தூண்டுகிறது. அந்த ஞானம் நமக்கு அமையட்டும், அந்த ஞான ஒளி நம் வாழ்க்கைப் பாதையில் ஒளிவீசி வழிகாட்டட்டும் என்ற பிரார்த்தனையோடு நாம் தீபம் ஏற்றுகிறோம்.

சடங்குகள் நிகழ்ச்சிகள் ஆகியவற்றில் தீபம் ஏற்றி வைப்பதும் அந்த ஞானாக்னியான இறைவன் அங்கு இருந்து அவை சிறப்பாக நடைபெற அருள்புரியட்டும் என்ற எண்ணத்தினால் தான்.

இனி தீபம் ஏற்றும் போதும், ஏற்றிய தீபத்தைக் காணும் போதும் இந்த அர்த்தத்தை நினைவுபடுத்திக் கொள்ளுங்கள்.

கர்ப்பக்கிரகத்தை வலம் வருவது எதற்காக?

கோயிலில் கர்ப்பக்கிரகத்தை வலம் வருவதும் கூட எல்லோரும் செய்கிறார்கள் என்று செய்கிறோம். அந்த நேரத்தில் பேசிக் கொண்டும் வேடிக்கை பார்த்துக் கொண்டும் எந்திரமாய் நடக்கிறோம். அது தவறு.

ஒரு வட்டத்தை மையப்புள்ளி இன்றி நாம் வரைய முடியாது. இறைவன் தான் நம் வாழ்வின் மையம், ஆதாரம் எல்லாம். அந்த இறை மையத்தை ஆதாரமாகக் கொண்டே நாம் இயங்குகின்றோம் என்பதை உணர்த்துவதே இந்த பிரதக்ஷிணம் என்ற வலம் வருதல். வலம் வருவதும் நாம் இடமிருந்து வலமாகத் தான் செய்கிறோம். இப்படி வலம் வருகையில் இறைவன் எப்போதும் நமக்கு வலப்பக்கமாகவே இருக்கிறான். நம் நாட்டில் வலப்பக்கத்தை மங்கலமாகக் கருதுகிறார்கள். ஆங்கிலத்தில் கூட அது right side என்றே அழைக்கப்படுகிறது.

எனவே கர்ப்பக்கிரகத்தை வலம் வருகையில் எல்லாம் வல்ல இறைவன் என்ற மையத்தை வைத்தே நாம் நம் வாழ்வில் இயங்குகிறோம், அவனை நம் இதயத்தின் மையத்தில் வைத்தே அனைத்து எண்ணங்களும் எழ வேண்டும் என்ற பாவனையில் சுற்றி வந்து பாருங்கள். தொழுது விட்டு வெளியே வரும் போது உங்களுக்குள் அமைதியும் சக்தியும் அதிகரிக்கக் காண்பீர்கள்.

புரிந்து செய்யும் போதே இது போன்ற செயல்கள் புனிதமாகின்றன. புரியாமல் செய்யும் போது இவை வெறும் சம்பிரதாயம் மட்டுமே. புரியாமல் எத்தனை முறை செய்தாலும் அவை ஒரு பலனையும் நமக்கு ஏற்படுத்தாது. எனவே புரிந்து, உணர்ந்து, பக்தியுடன் செய்து பலன் காணுங்கள்.