Tuesday 29 May 2012

ஆம்பூர் மட்டன் பிரியாணி!!




தேவையான பொருட்கள்: பாசுமதி அரிசி - 1 கிலோ, மட்டன் - 1 கிலோ, மிளகாய் - தூள் 2 தேக்கரண்டி, வெங்காயம் - 500 கிராம், பழுத்த தக்காளி - 500 கிராம்,
பச்சை மிளகாய் - 5
புதினா - 1 கொத்து, எண்ணெய் - 200 மில்லி, நெய் - 50 மில்லி, எலுமிச்சை -அரை பழம்
பட்டை, ஏலம், கிராம்பு - தலா 2, பிரியாணி இலை - 2, உப்பு தூள் - தேவையான அளவு

செய்முறை: அரிசியை ஊற வைக்க வேண்டும். மட்டனை கொழுப்பெடுத்து கழுவி தண்ணீரை வடிக்க வேண்டும். வாயகன்ற பாத்திரத்தை அடுப்பில் எண்ணெய் ஊற்றி அதில் பட்டை, ஏலம், கிராம்பு, பிரியாணி இலை போட்டு வெடிக்க விட்டு வெங்காயத்தை நீளவாக்கில் அரிந்து சேர்த்து நன்கு வதக்க வேண்டும். வதக்கியதும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து நன்கு வதக்கி மிளகாய் தூள், பழுத்த பச்சை மிளகாய் சேர்த்து நன்கு வதக்க வேண்டும். பிறகு புதினா, தயிர் சேர்க்க வேண்டும். அடுத்து தக்காளியும் கொத்துமல்லியும் சேர்க்க வேண்டும்.

அடுத்து உப்பு, மட்டன் சேர்த்து நன்கு கிளறி, தீயின் தனலை சிம்மில் வைத்து மட்டனை வேக விட வேண்டும். மட்டன் வெந்து கூட்டு கிரேவி பதம் வரும் வரை வேக விட வேண்டும். மட்டன் அதிகமாக இருந்தால் அதற்கு தகுந்தாற் போல் தண்ணீர் ஊற்ற வேண்டும். ஒரு டம்ளர் அரிசிக்கு ஒன்னேகால் வீதம் தண்ணீர் அளந்து ஊற்ற வேண்டும். தண்ணீர் ஊற்றி கொதி வந்ததும் அரிசியை களைந்து போட்டு கொதிக்கவிட்டு கடைசியாக சிறிது நெய், லெமன் பிழிந்து, பாதி அளவு வற்றும் போது அடுப்பின் மேல் தம் போடும் கருவியை வைத்து சாப்பாடு சட்டியின் மேல் கனமான பாத்திரத்தை வைத்து 20 நிமிடம் தம்மில் விட வேண்டும். பிறகு லேசாக மேலிருந்து கீழாக சாதம் குழையாமல் பிரட்டி எடுக்க வேண்டும். இப்போது சுவையான ஆம்பூர் மட்டன் பிரியாணி ரெடி.

எப்போதும் இளமையாக இருக்க .......



தினசரி ஒரு கைப்பிடியளவுக்கு பாதாம் பருப்பு, வேர்க்கடலை போன்ற கொட்டை வகைகளைச் சாப்பிடுங்கள். இதை சாப்பிட்டால் இதய நோய் அபாயம் வெகுவாக குறையும். ஆயுளில் 3 ஆண்டுகளை அதிகரிக்கும் என்கிறார்கள் அமெரிக்க ஆராய்ச்சியாளர்கள், இதயத்துக்கு ஆரோக்கியமளிக்கும் நல்ல கொழுப்பு, ஒட்டுமொத்த நலனை காக்கும் 'செலினியம்' ஆகியவை கொட்டை வகை உணவுகளின் சொத்து.

உங்கள் உணவில் வாரத்தில் 2 முறை மீன் இருக்கட்டும். இரண்டில் ஒன்று எண்ணெய் மீனாக இருந்தால் நல்லது. கொலஸ்ட்ராலை குறைத்து, இருதய நோய் அபாயத்தைக் கட்டுப்படுத்தக்கூடிய 'ஒமேகா 3 பேட்டி ஆசிட்', எண்ணை செறிந்த மீன்களில் அதிகம் உள்ளது.

சாப்பாடுகளுக்கு இடையே 3 மணிநேர இடைவெளி அவசியம். மூன்று பிரதான உணவுகளில் காலை உணவை முழுமையாக சாப்பிடுங்கள்.

தினசரி 4 கப் காபி பருகலாம். ஆரோக்கியம் காக்கிறேன் பேர்வழியென்று காபியையே துறக்க வேண்டாம். அளவாக காப்பி பருகுவது என்பது சர்க்கரை நோய், உணவுக்குழாய் கேன்சர், ஈரல் நோயிகளைத் தடுக்கும் என்பது ஆய்வாளர்களின் கருத்து.

தினந்தோறும் 5 வகை பழங்கள், காய்கறிகள் சாப்பிடுவது ஆரோக்கிய வாழ்வுக்கு அடித்தளமிடும். பழங்கள், காய்கறிகளில் உள்ள 'ஆண்டி ஆக்ஸிடன்ட்கள்' கேன்சர், இருதய நோயிகளைத் தடுக்கும், நோயித் தொற்றுக்கு எதிராக இருக்கும். முன்றுக்கு இரண்டு என்ற விகிதத்தில் காய்கறி, பழங்கள் எடுத்துக் கொள்ளலாம். காய்கறிகள் அதிகமான நார்ச்சத்தையும், குறைவான சர்க்கரை சத்தையும் கொண்டுள்ளன.

வயதுக்கு வந்தவர்கள் தினமும் 6 கிராமுக்கு மேல் உப்பு சேர்க்க வேண்டாம். சமையல் செய்யும்போது மட்டும் உப்பு சேர்க்கவேண்டும். பிரெட், பாக்கிங் உணவு வகைகளில் அதிக உப்பு மறைந்திருக்கிறது என்பதை உணருங்கள்.

மொத்தம் 7 வகையான நிறங்களை கொண்ட காய்கறிகள், பழங்கள் இருக்கின்றன. ஒவ்வொரு வண்ண காய்கறி, பழங்களும் வெவ்வேறு வகையான 'ஆண்டி ஆக்ஸ்டன்ட்களை' கொண்டிருக்கிறன. எனவே எல்லா வண்ண காய்கறி, பழங்களும் உங்கள் உணவில் இருக்கட்டும்.

தினமும் 8 கப் திரவம் குடிப்பது அவசியம். ஆனால் அது எல்லாம் தண்ணீராக இருக்க வேண்டும் என்ற அவசியமில்லை. டீ, காபியும் இதில் இடம்பெறலாம்.

சராசரியாக பெண்கள் 9 வகை மாவுசத்து உணவுகளை (ஆண்களுக்கு 11 வகை) சாப்பிடவேண்டும். ஒரு துண்டு ரொட்டி, முட்டை அளவு உருளைக் கிழங்கு, 28 கிராம் சாதம் போன்றவை இதில் அடங்கியிருக்கலாம்.

சாதரணமாக குளிபானங்களில் 10 சதவீத சர்க்கரை உள்ளது. அதாவது ஒரு புட்டியில் 150 கலோரி இருக்கிறது. தொடர்ந்து குளிர்பானம் பருகுவது தொப்பைக்கு ஒரு முக்கிய காரணம். 'டயட் ' குளிர்பானங்களுக்கு மாறலாம். ஜூஸுடன் அதிக தண்ணீர் சேர்த்துப் பருகலாம்.

காலை உணவும், மதிய உணவும் 11 மணியை தாண்ட வேண்டாம். அதிகப் பசியின் போது நீங்கள் அதிகமாக சாப்பிடுவீர்கள்.

பொதுவாக பெண்கள் உணவில் 12 மில்லி கிராம் இரும்புச் சத்தை எடுத்துக்கொள்கிறார்கள். இரும்புச்சத்து செறிந்த உணவுகளை உங்கள் உணவில் தினசரி சேர்த்துக் கொள்ளுங்கள்.

சாதாரணமாக நாம் நம் ஒவ்வொரு கிலோ எடைக்கும் 26 கலோரி உணவு சாப்பிடலாம்.

பனை அல்லது தென்னை மரத்திலிருந்து கிடைக்கும் சுத்தமான பதநீர், கள் போன்றவற்றை தினமும் ஒரு கோப்பை அருந்தலாம்.

நீங்கள் ஒருமுறை உணவை விழுங்கும்போது 15 முறை மெல்ல வேண்டும். நாம் சராசரியாக 7 முறைதான் உணவை மேல்கிறோம்.

அங்களுக்கு தினசரி 16 சதவீதபுரதம் அவசியம். அதாவது 55 கிராம். பெண்களுக்கு என்றால் 45 கிராம்.

நாம் அனைத்து விதமான சத்துக்களையும் பெற, ஒவ்வொரு 3 நாட்களுக்கும் 17 வகையான உணவு வகைகளை உண்ண வேண்டும் என்கின்றனர் உணவியல் நிபுணர்கள்.

அனைவருக்கும் தினசரி 18 கிராம் நார்சத்து தேவை. அதற்கு தானியங்கள், பழங்கள், காய்கறிகள் ஆகிறவை நல்ல ஆதாரங்கள்.

மொத்தம் 19 வகையான தாது உப்புகள், வைட்டமின்கள் அனைவருக்கும் அவசியத் தேவை என்பது மருத்துவர்களின் கருத்து.

உங்கள் தினசரி உணவில், கொழுப்பு 20 கிராம்களுக்கு அதிகமாக இருக்கக்கூடாது. உங்கள் தினசரி கலோரிகளில் 35 சதவீதத்துக்குள் தான் கொழுப்பின் பங்கு இருக்க வேண்டும்.

பால் சார்ந்த உணவு வகைகளில் 21, ஒவ்வொரு வாரமும் உங்கள் உணவுப் பட்டியலில் இருப்பது கட்டாயம். தினசரி மூன்று வகையான பால்சார்ந்த உணவுப் பொருட்களை சாப்பிடுங்கள்.

Wednesday 23 May 2012

தொப்பை கரைக்கும் மூலிகை வைத்தியம் அன்னாசிப்பழம்


-

அன்னாசி பழத்தில் விட்டமின் பி உயிர்சத்து அதிக அளவில் உள்ளது. அது உடலில் ரத்தத்தை விருத்தி செய்வதாகவும், உடலுக்கு பலத்தை தருவதாகவும் இருப்பதோடு பல வியதிகளை குணப்படுத்தும் அரிய மருந்தாகவும் இருக்கிறது. தேகத்தில் பேதுமான ரத்தமில்லாமல் இருப்பவர்களுக்கு அன்னாசிப்பழம் ஒரு சிறந்த டானிக்காகும்.

நன்றாக பழுத்த அன்னாசி பழத்தை சிறு சிறு துண்டுகளாக செய்து வெய்யிலில் தூசிப்படாமல் உலர்த்தி வற்றல்களாக செய்து வைத்து கொண்டு தினமும் படுக்க செல்வதற்கு 1/2 மணி நேரத்திற்கு முன்னதாக ஒரு டம்ளர் பாலில் 5 அன்னாசி வற்றல்களை ஊற வைத்துஇ பின் படுக்கச் செல்லும் போது ஊறிய வற்றல்களை 48 நாட்கள் சாப்பிட்டு வரவேண்டும்.

இதனால் பித்தம் சம்மந்தமான அனைத்து கோளாறுகளும் நீங்கும். அன்னாசி பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வர பெண்களுக்கு ஏற்படும் வெள்ளை நோய் குணமாகும். அன்னாசி பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வர அனைத்து விதமான உடல் உபாதைகளும் தீரும். இதை தொடர்ந்து ஜூஸ்சாகவும் குடித்து வர முக அழகு பொலிவு பெருகும்.இளம்பெண்கள் உட்பட அனைவரின் தொப்பையும் கரைக்கும் சக்தி அன்னாசிக்கு உண்டு. ஓர் அன்னாசிப்பழத்தைச் சிறு துண்டுகளாக நறுக்கி நான்கு தேக்கரண்டி ஓமத்தை பொடி செய்து அதில் போட்டு நன்றாகக் கிளறி ஒரு ட்ம்பர் தண்ணிர் ஊற்றிக் கொதிக்கவிடவும்.

இரவில் அதை அப்படியே வைத்திருந்து மறு நாள் காலையில் அதைப் பிழிந்து சாறு எடுத்து வெறும் வயிற்றில் சாப்பிடவும்.

இந்த முறைப்படி பத்து நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் உங்கள் தொப்பை கரைய ஆரம்பிக்கும்.

2. இஞ்சி சாறை பாலில் கலந்து சாப்பிட உடல் எடை குறையும்.

3. ஊற‌வைத்த‌ அவ‌லை காலையிலும், இர‌விலும் சாப்பிட்டுவ‌ர‌உட‌ல் எடை குறையும்.

4. தினமும் 300 கிராம் கருணைக் கிழங்கை மதிய உணவில் சமைத்து சாப்பிட உடல் எடை குறையும்.

5. நத்தைச் சூரியின் விதைகளை பொன் வறுவலாக வறுத்து தண்ணீர் விட்டு சுண்ட வைத்து வடிகட்டி 100 மில்லியளவு எடுத்து அத்துடன் 1 டம்ளர் பசும்பால் கலந்து 2 வேளை தொடர்ந்து குடித்து வர உடலில் எடை குறையும்.

6. பசலைக் கீரையுடன் பூண்டு, மிளகு ஆகியவற்றை சேர்த்து அவித்து, கடைந்து சாப்பிட்டால், உடலில் உள்ள அதிகப்படியான‌கொழுப்பு குறையும்.

7. காசினிக் கீரையை உலர்த்தி பொடியாக்கி தினமும் இரவில் சாப்பிட்டால் உடல் பருமன் குறையும்.

இளமையை தக்கவைக்கும் ஒட்ஸ்




உடம்பில் நோய்கள் இருந்தாலும் வாழ்க்கையை மகிழ்ச்சியாக வைத்திருக்க முடியும் என்கின்றனர் உணவியல் வல்லுநர்கள். ஓட்ஸ் உணவு உட்கொள்வதன் மூலம் நோய்களை கட்டுப்படுத்தி சந்தோசமாக வாழமுடியும் என்று பல்வேறு ஆய்வுகளின் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளதாகவும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

ஓட்ஸ் உணவில் மனரீதியாகவும், உடல் ரீதியாகவும் குணப்படுத்தும் அம்சங்கள் நிறைய உள்ளன என்று கடந்த 200 ஆண்டுகளாக ஜெர்மானியர்களும், கடந்த 100 ஆண்டுகளாக சீனர்களும் கடந்த 32 ஆண்டுகளாக அமெரிக்கர்களும் நிரூபித்துள்ளனர்.

முழுமையான நிவாரணி

ஓட்ஸ் உணவில் எண்ணற்ற ஊட்டச்சத்துக்கள் உள்ளன. இதில் வைட்டமின் இ , துத்தநாகம், செலினியம், காப்பர், இரும்புச்சத்து, மெக்னீசியம், மாங்கனீஸ் போன்றவை காணப்படுகின்றன. இதில் அதிக அளவு புரதமும் உள்ளது.

நீரிழிவு நோயாளிகளும், கொழுப்பு சத்து, உடல்பருமன் கொண்டவர்களும், உயர் ரத்த அழுத்தம் உடையவர்களும் தினசரி ஒரு கப் ஓட்ஸ் உட்கொள்வதன் மூலம் இந்த நோய்களை கட்டுப்படுத்தலாம் என்று உணவியல் வல்லுநர்கள் கூறியுள்ளனர்.

தினமும் ஒரு கப் ஓட்ஸ்

தினசரி காலை ஒரு கப் ஓட்ஸ் கஞ்சி பருகுவதன் மூலம் அதில் உள்ள நார்ச்சத்து புற்றுநோய் செல்களை அகற்றுகிறதாம். இதில் உள்ள ரசாயனம் புற்றுநோய் செல்களை எதிர்த்து அவற்றை அழிக்கின்றனவாம். கெட்ட கொழுப்புகளை நீக்குகிறதாம். நீரிழிவு நோயாளிகள் ஓட்ஸ் பருகுவதன் மூலம் அவர்களுக்கு ஜீரணம் மெதுவாக நடைபெற்று ரத்தத்தில் சர்க்கரை உடனே கலப்பது தடுக்கப்பட்டது.

இதயநோய்

இதய நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தினசரி ஓட்ஸ் உணவு கொடுத்து வந்ததன் மூலம் இதயத்தில் ரத்த நாளங்களில் படிந்திருந்த கெட்ட கொழுப்புகள் அகன்றன. தமனி இறுக்கம் நீங்கி மூச்சு விடுவதில் இருந்த சிரமம் குறைந்தது. உயர் ரத்த அழுத்தம் தவிர்க்கப்பட்டது. உடலில் உடல் பலவீனம் மறைந்தது. இறந்து போன செல்களுக்கு பதிலாக புதிய செல்கள் உருவானது.

இளமையை தக்கவைக்கும் ஒட்ஸ் சத்துக்கள்

பெண்கள் அழகாக, இளமையாகத் தோன்ற ஓட்ஸ் உணவுடன் 50 கிராம் பச்சை வெங்காயத்தை பச்சையாக உணவில் சேர்த்து சாப்பிட்டு வரவும். கோதுமையும், பாதாம் பருப்பையும் ஓட்ஸ் சாப்பிடும்போது சேர்த்துச் சாப்பிடவும், இதனால் கோபமும், கவலையும் பறந்து போகும் என்கின்றனர் ஆய்வாளர்கள்.

மகிழ்ச்சியான வாழ்க்கை

11, 12 ஆம் நூற்றாண்டுகளில் இங்கிலாந்து மக்கள் ஓட்ஸ் சாப்பிட்டார்கள். அதற்குப் பிறகு கடந்த ஆறு ஆண்டுகளாகத்தான் இவர்கள் சீனர்களைப் பார்த்து ஓட்ஸ் சாப்பிட ஆரம்பித்தார்கள். இன்றும் உலகில் ஓட்ஸ் அதிகம் சாப்பிடுகிறவர்கள் சுவிஸ் மக்கள்தான். இவர்கள் மகிழ்ச்சியாகவும், ஆரோக்கியமாகவும், நல்ல வருமானத்துடன், சேமிப்புடன் வாழ்கின்றனர். அதற்கு ஓட்ஸ் உணவு கொடுக்கும் உற்சாகம்தான் என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது.

ஓட்ஸ் உணவானது குதிரையின் நரம்பு மண்டலத்தைப் போல மனிதனின் மத்திய நரம்பு மண்டலத்தையும் இது கிளர்ச்சியுடன் வைத்திருக்கிறது என்பதிலிருந்து கண்டுபிடித்துள்ளனர். எனவே தினசரி ஒரு கப் ஓட்ஸ் உணவை எடுத்துக்கொள்வது ஆரோக்கியமானது என்று அறிவுத்துகின்றனர் உணவியல் வல்லுநர்கள்.

Friday 18 May 2012

ஒரு வருட ஜெ. ஆட்சியின் டாப் 10... ஃப்ளாப் 10..


ஒரு வருட ஜெ. ஆட்சியின் டாப் 10... ஃப்ளாப் 10...

ப.திருமாவேலன்
ஓவியம் : ஹாசிப்கான்




ரண்டாம் ஆண்டில் அடிஎடுத்து வைத்துவிட்டார் அம்மா! அதற்கான கொண்டாட்டங்களில் மூழ்கி இருக்கிறது அ.தி.மு.க. 80 சாதனைகளைச் சொல்லி, ஜெயலலிதா மகிழ்ச்சியைத் தெரிவிக்க... எத்தனையோ வேதனைகளை அடுக்கி மக்கள் அவஸ்தையை வெளிப்படுத்துகிறார்கள். நியாயமாகப் பார்த்தால் இரண்டின் கலவையாகவே முதல் ஆண்டைக் கடந்திருக்கிறார் ஜெயலலிதா!
 நல்லவை  10
தி.மு.க. ஆட்சியில் அதிகாரம், போலீஸைப் பயன்படுத்தி அடித்துப் பிடுங் கப்பட்ட நிலங்களை மீட்க எடுத்த முயற்சி கள், இன்றைய நில அபகரிப்பு மனிதர் களுக்கும் அச்சுறுத்தலாக அமைந்தது. வருமானத்துக்கு அதிகமாக, அடித்துப் பிடித்துச் சொத்து சேர்த்த தி.மு.க. மந்திரிகளின் வீட்டுக்குள் லஞ்ச ஒழிப்புத் துறை யைவிட்டு ரெய்டுகள் நடத்தியதும், அதற் கெனத் தனி நீதிமன்றம் அமைக்க முயற்சித் ததும் அனைத்துத் தரப்பினராலும் வரவேற் கப்பட்டது.
சசிகலா குடும்பத்தின் ஆக்டோபஸ் கரங்கள் வெட்டி எறியப்பட்டன. ஜெ. பதவி ஏற்ற மே மாதம் முதல் சசி டிஸ்மிஸ் செய்யப்பட்ட டிசம்பர் மாதம் வரை, இந்தக் குடும்ப உறுப்பினர்கள் செய்த காரியங்களுக்குத் தடை விழாமல் இருந்திருந்தால், 3-வது ஆண்டு விழாவின்போது தமிழ்நாடே தனியார் சிலருக்குச் சொந்தமாகி இருந்துஇருக்கும். இந்தக் கும்பலுக்குத் தடுப்பணை விழுந்தது எல்லோரும் வரவேற்பது.
இரண்டு விஷயங்களில் ஜெ. சிறப்புக் கவனம் செலுத்தினார். ஒன்று, மதுரையை அடாவடி மனிதர்களின் ஆதிக்கத்தில் இருந்து மீட்பதில் உறுதி காட்டியது. இரண்டாவது, அ.தி.மு.க-வினர் சிலருக்கே பிடிக்காதது. ஆனால், ஜெ. தயக்கம் இல்லாமல் செய்தார். தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தை முறைகேடு இல்லாத தேர்வு அமைப்பாக மாற்ற அவர் எடுத்த முயற்சிகள் இளைஞர்களுக்கு நம்பிக்கை கொடுத்தன.
மத்திய அரசுடன் இணக்கமாக இருப்பது வேறு. அண்டிப் பிழைப்பது வேறு. பாதகமான காரியங்கள் நடந்தாலும் ஒரு மாநில அரசு சுயாட்சி உரிமைகொண்ட தாகச் செயல்பட வேண்டும் என்பதை நடைமுறையில் காட்டிய தைரியம் ஜெயலலிதாவின் தனித்தன்மையை உறுதிப் படுத்துகிறது.
ஈழத் தமிழர் விவகாரத்தில் கடந்த காலத்தில் இன விரோத நிலைப்பாடுகளை எடுத்தாலும், ஆட்சியைப் பிடித்த பிறகு கொண்டுவந்த தீர்மானங்கள், விடுத்த அறிக்கைகள் புலம் பெயர்ந்த தமிழர்கள் மத்தியில் முதல்வரின் செல்வாக்கை அதிகரித்து உள்ளது.
தினமும் தலைமைச் செயலகம் வருவது, அதிகாரிகள் மற்றும் அமைச்சர்களுடன் கலந்துரையாடுவது, முக்கியப் பிரச்னைகள்பற்றி அடிக்கடி ஆலோசிப்பது போன்றவை பழைய ஜெயலலிதாவைவிட இன்றைய ஜெ. உற்சாகமானவர் என்றே காட்டுகிறது. சட்டப் பேரவை நடவடிக்கைகளில் தொடர்ந்து பங்கேற்று விவாதங்களில் கலந்துகொண்டு வாத வல்லுநராகவும் திகழ்கிறார்.
தி.மு.க. ஆட்சியில் பல அமைச்சர்கள் தலைகால் புரியாமல் ஆடினார்கள். அந்தச் சூழ்நிலை இப்போது இல்லை. ஆளும் கட்சியினர் காவல் நிலையங்களுக்குச் சென்று கட்டப்பஞ்சாயத்து செய்வதும் குறைந்துவருகிறது. 'பதவியை வைத்து ஆடினால், அம்மா ஆப்பு அடித்துவிடுவார்’ என்ற அசரீரிக் குரல் கேட்பதே தப்பைக் குறைக்கிறது.
வெண்மைப் புரட்சிக்கு வித்திடும் வகையில், கறவை மாடுகள், ஆடுகள் வழங் கியதும், ஏழைப் பெண்களின் திருமணத் துக்கு தாலிக்குத் தங்கம் வழங்கியதும் கிராமப்புற மக்களுக்கு நல்ல உதவியாக அமைந்து இருக்கிறது.
கல்வித் துறையிலும் சிறப்புக் கவனம் செலுத்தினார் ஜெ. பள்ளி, கல்லூரி மாணவ - மாணவியருக்கு இலவச லேப்டாப் வழங்குவதில் தொடங்கி, 55 ஆயிரம் ஆசிரியர் நியமனம் வரை நடந்தால்... தமிழகப் பள்ளிக் கல்வி செழிக்கும்.
தன்னுடைய இலக்கு இதுதான் என்பதை வரையறுத்து 'விஷன் 2023’ வெளியிட்டார் முதல்வர். தன்னுடைய எண்ணங்களை அடுத்த 10 ஆண்டுகளுக்கு உரியதாக சொன்ன தன்னம்பிக்கை அனை வராலும் பின்பற்றத்தக்கது.
அல்லவை  10
சென்ற தி.மு.க. ஆட்சியில் எகிறி வந்த விலைவாசி, கடந்த ஆண்டு ஏகத்துக்கும் ஏறியது. விலைவாசியைக் கட்டுப்படுத்துவது அரசாங்கத்தின் கையில் இல்லை என்ற மெத்தனம் ஆட்சியாளர்களுக்கு இருக்கிறது. இதைத் தடுக்க முயற்சிக்காத ஜெ., பால் விலையையும் பஸ் கட்டணத்தையும் தன் பங்குக்கு ஏற்றிவைத்தார்.
மின் வெட்டு முழுமையாக இல்லாத தமிழ்நாட்டை எப்போது பார்க்க முடியும் எனத் தெரியவில்லை. இதற்கான திட்டமிடுதல்களில் ஜெயலலிதா முழுக் கவனம் செலுத்தியதாகவும் தெரியவில்லை. 6 முதல் 8 மணி நேரம் வரை மின் வெட்டு இருந்ததும்... இன்னும் பல இடங்களில் இருப்பதும் வேதனையானது.
தமிழ்நாட்டின் பொதுச் சொத்தான மணல், பட்டப்பகலில் கொள்ளை அடிக் கப்படுகிறது. என்ன சட்டதிட்டப்படி, யார் எடுக்கிறார், எவ்வளவுக்கு விற்கிறார் என்ற வரைமுறையே இல்லாமல் பூட்டு உடைக்கப்பட்ட வீடாக ஆறுகள் கொள்ளை அடிக்கப்படுகின்றன. இதுபற்றியவெள்ளை அறிக்கை தாக்கல் செய்யப்பட வேண்டும்.
கருணாநிதி கொண்டுவந்தவை என்பதற்காக, அண்ணா நூற்றாண்டு நினைவு நூலகத்தையும் தலைமைச் செயலகத்தையும் மருத்துவமனை ஆக்க முயற்சித்தார். சமச்சீர்க் கல்வியை என்ன செய்தேனும் ஒழிக்க முயற்சித்தார். செம்மொழி நூலகம் என்ன ஆனது என்றே தெரியவில்லை.
மூன்று தமிழர் தூக்கு, கூடங்குளம் எனப் பல முடிவுகளை மாற்றிக்கொண்டே இருந்தார். அதிகாரிகளும் அமைச்சர்களும் முதல் ஆறு மாதத்தில் பந்தாடப்பட்டே வந்தார்கள். 'எடுத்த முடிவில் எப்போதும் தெளிவானவர்’ என்ற பெயரை ஜெ. இழந்தார்.
ஜெயலலிதா ஆட்சிக்கு வந்தால், சட்டம் - ஒழுங்கு சரியாக இருக்கும் என்ற நினைப்பில் மண் விழுந்தது. குற்றம் நடக்காத நாளே இல்லை எனலாம். இதற்கு முக்கியக் காரணம், போலீஸ் - குற்றவாளிகள் இடையிலான நட்புதான். இந்தக் கண்ணியை உடைக்காமல், நாட்டில் அமைதியை ஏற்படுத்த முடியாது.
அப்பழுக்கற்ற அரசாங்கம் நடக்கிறது என்று சொல்ல முடியவில்லை. கடந்த ஆட்சியைவிட கமிஷன் சதவிகிதம் உயர்த் திய அமைச்சர்களும் இருக்கிறார்கள். கான்ட்ராக்ட் மனிதர்களின் நடமாட்டமும் தலைமைச் செயலகத்தில் அதிகம். ஐ.ஏ.எஸ். அதிகாரிகளே புரோக்கர்களாக மாறிய அவலமும் தொடர்கிறது.
சசிகலாவைக் கட்சியைவிட்டு நீக்கியபோது உயர்ந்த இமேஜ், அவரை மறுபடியும் சேர்த்துக்கொண்டபோது சரிந்தது. 'சசிகலா செய்தது எதுவும் எனக்குத் தெரியாது’ என்று ஜெ. சொன்ன வாதத்தை மக்கள் நம்பத் தயாராக இல்லை.
சட்டப் பேரவையில் அளவுக்கு மீறி அம்மா புகழ் பாடும் ஜால்ரா சத்தமே கேட்கிறது. ஆளும் கட்சியை விமர்சித்துப் பேச எதிர்க் கட்சிகளை அனுமதிப்பது இல்லை. அமைச்சர்கள் முதல் அ.தி.மு.க. எம்.எல்.ஏ-க்கள் வரை அனைவருமே தங்கள் சொந்த அம்மாவைக்கூட இத்தனை தடவை 'அம்மா’ என்று அழைத்திருப்பார்களா என்ற சந்தேகமே எழுகிறது.
முதல்வர் மீது மரியாதை இருக்கலாம். பக்திகூட இருக்கலாம். பயம் இருந்தால், அது அவருக்கேகூடப் பயன்படாது. அதுவும் சில அமைச்சர், அதிகாரிகளுக்கு மரண பயமே இருக்கிறது. இத்தகைய மனிதர்களை வைத்து ஜெயலலிதாவால் நல்லாட்சி தரவே முடியாது. நெகிழ்வுத்தன்மை உள்ளவராக ஜெயலலிதா தன்னை மாற்றிக்கொண்டால் மட்டுமே வெற்றியைத் தக்கவைக்க முடியும்.

Wednesday 16 May 2012

30 வகை கூல் கூல் ரெசிபி



தொகுப்பு: பத்மினி
படங்கள்: எம்.உசேன்
 
அக்னி வெயில் ஆட்டம் போடும் நேரம் இது! 'ஹவ் டு பீட் த ஹீட்..?’ என்று அனை வரும் மண்டை காய்ந்து கொண்டுஇருக்கும் இந்த சமயத்தில், 30 வகை 'கூல் கூல் ரெசிபி’களை வழங்கி உங்களை குளிர்ச்சிப்படுத்துகிறார் சமையல் கலை நிபுணர் தீபா பாலசந்தர்.
''தாகம் தணிப்பதோடு, உடல் ஆரோக்கியத்தையும் உறுதிப்படுத்தும் வகையில் நெல்லி பட்டர் மில்க், மூலிகை சில்லர், சீரக - தனியா வாட்டர், இளநீர் - பனங்கற்கண்டு டிரிங்க் போன்றவற்றை வழங்கியுள்ளேன். இந்தக் கோடையை உங்கள் இல்லத்தில் இதமாக கொண் டாடுங்கள்'' என்று அழைப்பு விடுக்கும் தீபாவின் ரெசிபிகளை, கண் குளிரும் விதத்தில் அலங்கரித்திருக்கிறார் செஃப் ரஜினி.
 மல்டி வைட்டமின் ட்ரீட்
தேவையானவை: கேரட் - ஒன்று, நெல்லிக்காய் - 2, நறுக்கிய சௌசௌ - அரை கப், ஆரஞ்சு - ஒன்று, சர்க்கரை - தேவையான அளவு.

செய்முறை: கேரட்டை பொடியாக நறுக்கவும். நெல்லிக்காயின் கொட்டையை நீக்கிவிட்டு சதைப் பகுதியை மட்டும் எடுத்துக் கொள்ளவும். சௌசௌவை தோலை சீவி பொடியாக நறுக்கவும். ஆரஞ்சு பழத்தை உரித்து சுளைகளை தனியே எடுக்கவும். பிறகு, எல்லாவற்றையும் ஒன்றாக கலந்து மிக்ஸியில் அரைத்து, வடிகட்டி, சர்க்கரை சேர்த்துக் குளிர வைத்தால்... மல்டி வைட்டமின் ட்ரீட் ரெடி!
 பனானா ஃப்ளோட்
தேவையானவை: நன்கு பழுத்த வாழைப்பழம் - 2, பால் - ஒரு கப், சர்க்கரை - 10 டீஸ்பூன், ஐஸ்க்ரீம் - தேவையான அளவு, பாதாம், முந்திரி - தலா 10.

செய்முறை: பாலைக் காய்ச்சி ஆற வைக்கவும். வாழைப்பழத்தின் தோலை நீக்கி, பாலுடன் பழத்தை சேர்த்து, மிக்ஸியில் அரைக்கவும். இதனுடன் சர்க்கரையையும், பொடியாக நறுக்கி வறுத்த பாதாம், முந்திரியையும் சேர்த்து குளிர வைக்கவும். பரிமாறும்போது பழக் கலவையை 'கப்’பில் போட்டு அதன் மேல் சிறிதளவு ஐஸ்கிரீம் சேர்த்துப் பரிமாறவும்.
 மிக்ஸ்டு வெஜ் ராய்த்தா
தேவையானவை: தயிர் (கடைந்தது) - ஒரு கப், வெள்ளரி, கேரட் - தலா ஒரு துண்டு, தக்காளி - ஒன்று, பச்சை மிளகாய் - 2, இஞ்சி - ஒரு சிறு துண்டு, உப்பு - தேவையான அளவு.

செய்முறை: தக்காளி, பச்சை மிளகாய், வெள்ளரி ஆகியவற்றை பொடியாக நறுக்கவும், கேரட்டை துருவிக் கொள்ளவும். இஞ்சியை தோல் சீவி துருவவும். தயிருடன் உப்பு, துருவிய கேரட், இஞ்சி மற்றும் பொடியாக நறுக்கிய தக்காளி, வெள்ளரி, பச்சை மிளகாய் சேர்த்துக் கலக்கி, குளிர வைத்து பரிமாறவும்.
நெல்லி பட்டர் மில்க்
தேவையானவை: நெல்லிக்காய் - 4, மோர் - ஒரு கப், உப்பு, பெருங்காயம் - தேவையான அளவு.

செய்முறை: நெல்லிக்காயின் கொட்டையை நீக்கிவிட்டு, பொடியாக நறுக்கி, உப்பு சேர்த்து மிக்ஸியில் அரைக்கவும். இதனுடன் பெருங்காயம், மோர் சேர்த்துக் கலக்கி, குளிர வைத்து பருகலாம்.
குறிப்பு: வைட்டமின் 'சி’ நிறைந்த இந்த எனர்ஜி டிரிங், வயதானவர்களுக்கு மிகவும் ஏற்றது.
 ஆப்பிள் சோடா
தேவையானவை: ஆப்பிள் - ஒன்று, எலுமிச்சைச் சாறு - ஒரு டீஸ்பூன், சர்க்கரை, சோடா - தேவையான அளவு.

செய்முறை: ஆப்பிளை சுத்தம் செய்து பொடியாக நறுக்கி மிக்ஸியில் அரைத்து வடிகட்டவும். இதனுடன் எலுமிச்சைச் சாறு, சர்க்கரை கலந்து குளிர வைக்கவும். பரிமாறும்போது சோடா சேர்த்து கலந்து பரிமாறவும்.
 ஜில் காபி
தேவையானவை: பால் - ஒரு கப், இன்ஸ்டன்ட் காபி பவுடர் (ப்ரூ, சன்ரைஸ் போன்றவை) - ஒரு டீஸ்பூன், சர்க்கரை - 5 டீஸ்பூன், ஐஸ் க்யூப்ஸ் - 4.

செய்முறை: பாலைக் காய்ச்சி ஆற வைக்கவும். இதனுடன் இன்ஸ்டன்ட் காபி பவுடர், சர்க்கரை, ஐஸ் க்யூப்ஸ் சேர்த்து மிக்ஸியில் அரைத்துப் பருகவும்.
 தர்பூஸ் பானகம்
தேவையானவை: தர்பூசணி பழம் - ஒரு கீற்று, சுக்குப்பொடி - ஒரு சிட்டிகை, வெல்லம் - கால் கப், ஏலக்காய்த்தூள் - ஒரு சிட்டிகை, ஐஸ்கட்டி - தேவையான அளவு.

செய்முறை: தர்பூசணி பழத்தின் தோல், விதைகளை நீக்கிவிட்டு, சதைப் பகுதியை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி, நைஸாக மிக்ஸியில் அரைக்கவும். இத்துடன் ஐஸ்கட்டி சேர்த்து மீண்டும் மிக்ஸியில் ஒரு சுற்று சுற்றவும். வெல்லத்தைப் பொடித்து தண்ணீர் விட்டு காய்ச்சி, கொதி வந்த பின் வடிகட்டி, தர்பூஸ் கலவையுடன் கலந்து, சுக்குப்பொடி, ஏலக்காய்த் தூள் சேர்த்து கலக்கி, பருகலாம்.
 ஜீரா மில்க்
தேவையானவை: தேங்காய் - ஒன்று, சீரகம் - 2 டீஸ்பூன், வெல்லம் - தேவையான அளவு.

செய்முறை: சீரகத்தை ஐந்து நிமிடம் ஊற வைக்கவும். வெல்லத்தைப் பொடி செய்து தண்ணீர் சேர்த்துக் கொதிக்க விட்டு, வடிகட்டவும். தேங்காயைத் துருவி, சீரகம் சேர்த்து அரைத்து, வடிகட்டி பால் எடுக்கவும். வெல்லக் கரைசலுடன் தேங்காய் பாலைக் கலந்து ஃப்ரிட்ஜில் வைக்கவும். தேவையானபோது ஐஸ்கட்டி சேர்த்தோ, சேர்க்காமலோ பருகலாம்.
குறிப்பு: உடல் சூட்டை தணிப்பதோடு, வயிற்று புண்ணையும் ஆற்றவல்லது இந்த ஜீரா மில்க்.
 திரிவேணி ஜூஸ்
தேவையானவை: ஆரஞ்சு சாறு - ஒரு கப், எலுமிச்சைச் சாறு - அரை கப், இஞ்சி சாறு - ஒரு டீஸ்பூன், சர்க்கரை - தேவையான அளவு.

செய்முறை: ஆரஞ்சு சாறு, எலுமிச்சைச் சாறு, இஞ்சி சாறு ஆகியவற்றை ஒன்று சேர்த்து அவற்றுடன் சர்க்கரையையும் கலந்து, தேவையான அளவு தண்ணீர் சேர்த்து, குளிர வைத்து பரிமாறலாம்.
 டிரை ஃப்ரூட் கீர்
தேவையானவை: பாதாம் பருப்பு, முந்திரிப் பருப்பு, பேரீச்சம் பழம் - தலா 10, பால் (காய்ச்சியது) - ஒரு கப், ஏலக்காய்த்தூள் - சிட்டிகை.

செய்முறை: பாதாம் பருப்பை வெந்நீரில் ஊற வைத்து, தோல் உரிக்கவும். பிறகு, பாலில் பாதாம், முந்திரி, பேரீச்சையை சிறிது நேரம் ஊற வைத்து மிக்ஸியில் அரைத்து, ஏலக்காய்த்தூள் சேர்த்துக் கலந்து குளிர வைத்தால்... ஹெல்தியான கீர் ரெடி!
 கிர்ணிப்பழ ஜில் சாலட்
தேவையானவை: கிர்ணிப்பழம் - ஒன்று, எலுமிச்சைச் சாறு - ஒரு டீஸ்பூன், இஞ்சி சாறு - அரை டீஸ்பூன், சர்க்கரை - தேவையான அளவு.

செய்முறை: கிர்ணிப்பழத்தை தோல் சீவி, விதைகளை நீக்கி சிறு துண்டுகளாக நறுக்கவும். இஞ்சியை தோல் சீவி சாறு எடுத்து கொள்ளவும். கிர்ணிப்பழ துண்டுகளுடன், இஞ்சி சாறு எலுமிச்சைச் சாறு, சர்க்கரை சேர்த்து நன்கு கலக்கி, ஜில்லென்று பரிமாறவும்.
 பூண்டு மோர்
தேவையானவை: மோர் - ஒரு கப், தோல் நீக்கிய பூண்டு - 4 பல், சீரகம் - அரை டீஸ்பூன், கறிவேப்பிலை - ஒரு கொத்து, உப்பு - தேவையான அளவு.
செய்முறை: கறிவேப்பிலையை அலசி சுத்தம் செய்யவும். பூண்டு, கறிவேப்பிலை, சீரகத்தை ஒன்று சேர்த்து நைஸாக அரைக்கவும். இதனுடன் மோரைக் கலந்து, மிக்ஸியில் ஒரு சுற்று சுற்றி எடுத்து, உப்பு சேர்த்து, குளிர வைத்து பருகலாம்.


குறிப்பு: காரம் அதிகம் விரும்புவோர்... பூண்டு, கறிவேப்பிலை, சீரகத்தை அரைக்கும்போது ஒரு பச்சை மிளகாய் சேர்த்து அரைத்துக் கொள்ளலாம்.
 ஃப்ரூட் பஞ்ச்
தேவையானவை: ஆப்பிள் - ஒன்று, அன்னாசி பழம் - ஒரு துண்டு, ஆரஞ்சு பழம் - ஒன்று, எலுமிச்சம் பழம் - ஒன்று,  சோடா - ஒரு பாட்டில், சர்க்கரை - 10 டீஸ்பூன், ஐஸ்கட்டிகள் - தேவையான அளவு.

செய்முறை: ஆப்பிள், அன்னாசி, ஆரஞ்சு பழங்களை தோல் நீக்கி சாறு எடுக்கவும். இதனுடன் எலுமிச்சைச் சாறு, சர்க்கரை சேர்த்துக் கலக்கி, குளிர வைக்கவும். பரிமாறும்போது சோடாவை சேர்க்கவும். மேலே ஐஸ்கட்டிகளை மிதக்க விட்டு பரிமாறவும்.
 மின்ட்  லைம் ஜூஸ்
தேவையானவை: எலுமிச்சைச் சாறு - ஒரு கப், புதினா சாறு - கால் கப், சர்க்கரை - தேவையான அளவு, ஐஸ் கட்டிகள் - தேவையான அளவு.

செய்முறை: கொடுக்கப்பட்டுள்ள எல்லாவற்றையும் நன்கு கலந்து, குளிரச் செய்து, பரிமாறும்போது ஐஸ் கட்டிகளை மேலே மிதக்க விட்டு பரிமாறலாம். விரும்பினால் புதினா இலைகளை மேலே தூவலாம்.
க்ரீம் பிஸ்கட் ஷேக்
தேவையானவை: க்ரீம் பிஸ்கட் - 4 (ஏதாவது ஒரு வகை), பால் - ஒரு கப், சர்க்கரை - 2 டீஸ்பூன், முந்திரிப் பருப்பு - 5.

செய்முறை: பாலைக் காய்ச்சி ஆறவிடவும். இதில் க்ரீம் பிஸ்கட், சர்க்கரை சேர்த்து 10 நிமிடம் வைக்கவும். முந்திரிப் பருப்பை பொடியாக நறுக்கி வறுக்கவும். பிஸ்கட் ஊறிய பாலை மிக்ஸியில் அடித்து, அதன் மீது முந்திரியைத் தூவி, ஃப்ரிட்ஜில் வைத்து, கூலாக்கி பருகலாம்.
குறிப்பு: இந்த 'மில்க் ஷேக்’கை குழந்தைகள் மிகவும் விரும்பிச் சாப்பிடுவார்கள்
கேரட் ஜூஸ்
தேவையானவை: கேரட் - ஒன்று, சர்க்கரை - தேவையான அளவு.
செய்முறை: கேரட்டை சுத்தம் செய்து துருவவும். இதை  தேவையான அளவு தண்ணீர் விட்டு மிக்ஸியில் நைஸாக அரைத்து, சர்க்கரை கலந்து குளிர வைத்து பருகலாம்.
 
குறிப்பு: நோய் எதிர்ப்பு சக்தி குறைந்தவர்கள் இந்த ஜூஸை தினமும் பருகுவது மிகவும் நல்லது.
 சீரக  தனியா வாட்டர்
தேவையானவை: தண்ணீர் - ஒரு கப், சீரகம் - ஒரு டீஸ்பூன், தனியா - ஒரு டீஸ்பூன், மிளகு - 2.

செய்முறை: தண்ணீருடன் மிளகு, தனியா, சீரகம் சேர்த்து கொதிக்க வைத்து, ஆறிய பின் வடிகட்டி, குளிர வைத்து பருகினால்... சுவையாக இருக்கும்.
குறிப்பு: உடல் ஆரோக்கியத்தைத் தரும் இந்த நீரை எல்லா வயதினரும் பருகலாம்.
 பரங்கி  பூசணி ஷேக்
தேவையானவை: பரங்கி - ஒரு துண்டு, பூசணி - ஒரு துண்டு, பால் - ஒரு கப், சர்க்கரை - 5 டீஸ்பூன்.

செய்முறை: பரங்கி, பூசணியின் தோல், விதைகளை நீக்கி துருவவும். இந்த துருவலுடன் தண்ணீர் சிறிதளவு விட்டு வேக வைத்து இறக்கி ஆற வைக்கவும். பிறகு, காய்ச்சி ஆற வைத்த பால், சர்க்கரை இரண்டையும் அதில் சேர்த்து நைஸாக அரைத்து, குளிர வைத்து பருகலாம்.
 தக்காளி ஜூஸ்
தேவையானவை: பழுத்தத் தக்காளி - 5, மிளகு, சீரகம், உப்பு - தேவையான அளவு, சர்க்கரை - சிறிதளவு.

செய்முறை: தக்காளிப் பழம், மிளகு, சீரகம், உப்பு, சர்க்கரை எல்லாவற்றையும் சிறிது தண்ணீர் விட்டு அரைத்து, வடிகட்டி, ஃப்ரிட்ஜில் வைத்து, குளிர்ந்த பிறகு பருகலாம்.
குறிப்பு: குட்டீஸ்களுக்கு தருவதானால்... மிளகு, சீரகம், உப்பு சேர்க்காமல், சர்க்கரை மட்டுமே கலந்து கொடுக்கலாம்.
 இளநீர்  பனங்கற்கண்டு டிரிங்க்
தேவையானவை: இளநீர் - ஒன்று, பனங்கற்கண்டு தூள் - 5 டீஸ்பூன்.

செய்முறை: இளநீரை ஒரு பாத்திரத்தில் ஊற்றி, அதனுடன் பனங்கற்கண்டு கலந்து வைக்கவும். இளநீர் வழுக்கையை சிறு சிறு துண்டுகளாக்கி அதனுடன் கலந்து ஃப்ரிட்ஜில் வைத்து குளிர்ந்த பிறகு பருகலாம்.
குறிப்பு: இது, தாகத்தை தணிப்பதோடு, உடல் சூட்டையும் தணிக்கும்.
 வெஜ் மோர் கூலர்
தேவையானவை: கேரட் - ஒரு துண்டு, வெள்ளரி - ஒரு துண்டு, மோர் - ஒரு கப், இஞ்சி - ஒரு சிறு துண்டு, உப்பு - தேவையான அளவு.

செய்முறை: கேரட், வெள்ளரி, இஞ்சியை சுத்தம் செய்து உப்பு சேர்த்து மிக்ஸியில் அரைக்கவும். இந்த விழுதை மோருடன் கலந்து வடிகட்டி குளிர வைத்து பரிமாறவும்.
குறிப்பு: விரும்பினால் கொத்துமல்லித்தழை சேர்க்கலாம்.
 மூலிகை சில்லர்
தேவையானவை: சாத்துக்குடி - ஒன்று, தர்பூசணி துண்டுகள் - ஒரு கப், எலுமிச்சைச் சாறு - ஒரு டீஸ்பூன், துளசி இலை, புதினா இலை - தலா 10, சர்க்கரை - 4 டீஸ்பூன்.

செய்முறை: சாத்துக்குடியை பிழிந்து சாறு எடுக்கவும். தர்பூசணிப்பழ துண்டுகளை மிக்ஸியில் அரைத்து எடுக்கவும். சாத்துக்குடி சாறு, தர்பூஸ் விழுது, எலுமிச்சைச் சாறு, சர்க்கரை கலந்து மேலே துளசி, புதினா இலைகள் சேர்த்து, ஃப்ரிட்ஜில் குளிர வைத்து பரிமாறலாம்.
 ஸ்வீட் லைம்  லெமன் டீ
தேவையானவை: சாத்துக்குடி - ஒன்று, இன்ஸ்டன்ட் லெமன் டீ பவுடர் (நெஸ் டீ - டிபார்ட்மென்ட் கடைகளில் கிடைக்கும்) - 2 டீஸ்பூன், சர்க்கரை - 2 டீஸ்பூன்.

செய்முறை: சாத்துக்குடியை நறுக்கி ஜூஸ் பிழியவும். இதனுடன் சர்க்கரை, லெமன் டீ பவுடர், தேவையான அளவு தண்ணீர் விட்டு கலந்து, ஃப்ரிட்ஜில் வைத்து பருகினால்... புத்துணர்ச்சி ஏற்படும்.
 கிர்ணிப்பழ கூழ்
தேவையானவை: கிர்ணிப்பழம் - ஒன்று, சர்க்கரை - தேவையான அளவு.

செய்முறை: கிர்ணிப்பழத்தின் தோல், விதையை நீக்கிவிட்டு... சதைப் பகுதியை மட்டும் தனியாக எடுக்கவும். இதனுடன் தேவைக்கேற்ப சர்க்கரை கலந்து பிசைந்து, ஃப்ரிட்ஜில் வைத்து, ஜில்லென ஆன பின்பு பரிமாறவும்.
 வெள்ளரி லஸ்ஸி
தேவையானவை: வெள்ளரிக் காய் - ஒன்று, தயிர் - ஒரு கப், சர்க்கரை - 4 டீஸ்பூன், ஐஸ் க்யூப்கள் - தேவையான அளவு.

செய்முறை: வெள்ளரிக்காயை தோல் சீவி, துருவி, மிக்ஸியில் அரைக்கவும். இதனுடன் தயிர், சர்க்கரை சேர்த்து மேலும் ஒரு முறை மிக்ஸியில் அடித்து, ஐஸ் க்யூப் சேர்த்து பரிமாறவும்.
 கூல் டீ
தேவையானவை: டீத்தூள் - 3 ஸ்பூன், இஞ்சி - ஒரு சிறு துண்டு, சர்க்கரை - 3 டீஸ்பூன், எலுமிச்சைச் சாறு - ஒரு டீஸ்பூன்.

செய்முறை: டீத்தூளுடன் ஒரு கப் தண்ணீர் விட்டு, இஞ்சியை தட்டி சேர்த்து, நன்கு கொதிக்கவிடவும். பிறகு, இறக்கி ஆற வைத்து வடிகட்டி... எலுமிச்சைச் சாறு, சர்க்கரை சேர்த்துக் கலந்து, ஃப்ரிட்ஜில் வைத்து, குளிர்ந்த பின்பு பருகலாம்.
 ஜாம் மில்க்ஷேக்
தேவையானவை: பால் - ஒரு கப், ஃப்ரூட் ஜாம் - 2 டீஸ்பூன், சர்க்கரை - சிறிதளவு.

செய்முறை: பாலைக் காய்ச்சி, ஆற வைத்து, ஜாம் சேர்த்து மிக்ஸியில் அரைக்கவும். இதனுடன் சர்க்கரை சேர்த்து மீண்டும் மிக்ஸியில் ஒரு முறை சுற்றி எடுத்து ஃப்ரிட்ஜில் குளிர வைத்து பரிமாறினால்... சூப்பர் சுவையில் இருக்கும்.
குறிப்பு: விருப்பப்பட்டால், டிரை ஃப்ரூட்ஸ் வகைகளை துண்டாக்கி மேலே தூவி பரிமாறலாம்.
 தர்பூஸ் ஸ்பைசி ஜூஸ்
தேவையானவை: தர்பூசணி துண்டுகள் - ஒரு கப், மிளகுத்தூள் - ஒரு டீஸ்பூன், ஐஸ்கட்டிகள் - சிறிதளவு, உப்பு - தேவையான அளவு. 

செய்முறை: தர்பூசணி துண்டுகளுடன் உப்பு, மிளகுத்தூள் சேர்த்து மிக்ஸியில் அரைத்து எடுக்கவும். பரிமாறும்போது ஐஸ்கட்டிகளை கலந்து பரிமாறலாம்.
 வேஃபர் டிரிங்
தேவையானவை: வேஃபர் பிஸ்கட் - 2, பால் (காய்ச்சியது) - ஒரு கப், சர்க்கரை - 2 டீஸ்பூன்.

செய்முறை: வேஃபர் பிஸ்கட்டை பாலுடன் சேர்த்து மிக்ஸியில் அரைக்கவும். இதனுடன் சர்க்கரை கலந்து, ஃப்ரிட்ஜில் குளிர வைத்து பருகலாம்.
குறிப்பு: பரிமாறும்போது, வேஃபர் பிஸ்கட்டை சிறு துண்டுகள் ஆக்கி மேலே மிதக்க விட்டும் பரிமாறலாம்.
 ஐஸ்க்ரீம் ஷேக்
தேவையானவை: ஐஸ்க்ரீம் -  ஒரு கப் (சிறியது), பால் -  ஒரு கப் (காய்ச்சி ஆற வைத்தது), சர்க்கரை - 2 டீஸ்பூன்.

செய்முறை: ஐஸ்க்ரீம், பால், சர்க்கரை மூன்றையும் சேர்த்து மிக்ஸியில் நன்கு நுரை வர அடித்து, குளிர வைத்து பரிமாறவும்.
குறிப்பு: பொடித்த பாதாம், முந்திரி வகைகளை பரிமாறும்போது சேர்த்துச் சாப்பிடலாம்.