Tuesday 26 June 2012

நீங்கள் அத்தனை பேரும் சுத்தம்தானா?



சத்தலான அழகு, அல்ட்ரா மாடர்ன் தோற்றம், நுனி நாக்கு ஆங்கிலம் என்று படு ஸ்டைலாக இருப்பவர்கள்கூட சில சமயம் அருகில் வந்து வாய் திறந்தால், 'குப்’ என்று துர்நாற்றம் தூக்கும். தர்மசங்கடத்தில் நெளிந்து வளைந்து நாம் டான்ஸ் ஆட வேண்டி இருக்கும். ''உயிர் போற அவசரமான வேலையாக இருந்தாலும், அவரிடம் நேரில் சென்று பேச மாட்டேன். போனோட முடிச்சுக்குவேன்'' என்று ஒரு சிலர்குறித்து பயத்தோடும் முகச்சுழிப்போடும் சொல்லப்படுவதற்குக் காரணம்... வாய் துர்நாற்றம்!
ஒழுங்காகவும் முறையாகவும் பற்களை பிரஷ் பண்ணாமல் இருப்பதுதான் இந்தப் பிரச்னைக்கு முதல் காரணம். ஒரு நாளைக்குக் குறைந்தது இரண்டு தடவையாவது பல் துலக்குவது அவசியம். குறிப்பாக, இரவு படுக்கைக்குப் போவதற்கு முன்னர் பல் விளக்குவது மிகவும் அவசியம்.
சில வெளி சமாச்சாரங்களும் இருக்கின்றன. வெங்காயம், பூண்டு இதெல்லாம் சாப்பிட்டால், அந்த வாடை அதிக நேரம் வாயிலேயே சுற்றிக்கொண்டு இருக்கும். சின்ன வெங்காயத்தைப் பச்சையாகச் சாப்பிடுவது பல நன்மைகளைத் தரும். அது ஒரு கிருமிநாசினியும்கூட. ஆனால், வாயில் வெங்காய வாடை லேசில் போகாது.
பொடி போடுவது, வெற்றிலை, புகையிலை, ஜர்தா இந்த மாதிரி ஐட்டங்களைப் பயன்படுத்துவதும் 'வாசனை’ வீசச் செய்யும். புகைப் பழக்கம்பற்றிச் சொல்லவே வேண்டாம். எத்தனை தடவை வாய் கொப்பளித்தாலும் நிகோடின் நாற்றம் போகவே போகாது. மது நிச்சயமாகத் தன்னோட 'வாசனை’யைக் காட்டிக்கொடுத்துவிடும்.
இந்தப் பொதுக் காரணங்களைத் தவிர வேறு என்னென்ன காரணங்களால் வாயில் துர்நாற்றம் ஏற்படும் என்பது குறித்து, மருத்துவர் வி.எஸ்.நடராஜன் விவரிக்கிறார்.
''மருத்துவ மொழியில் வாய் நாற்றத்தை 'ஹாலிடோஸிஸ்’(Halitosis)  என்பார்கள். வாய் நாற்றம் ஏற்பட பாக்டீரியாக்களே முக்கியக் காரணம். வாய்க்குள்ளே அவை வளருவதற்குத் தேவையான ஈரம், வெதுவெதுப்பு, உணவு எல்லாம் கிடைப்பதால் கோடிக்கணக்கான பாக்டீரியாக்கள் ஒவ்வொருவர் வாயிலும் இருக்கின்றன. காலையில் எழும்போது அநேகமாக எல்லோருடைய வாயில் இருந்தும் நாற்றம் வீசும். இது 'ஹாலிடோஸிஸ்’ வகையில் சேராது. பகலில் உமிழ்நீர் வாயில் அதிகமாகச் சுரக்கும். இது பாக்டீரியாக்களைக் கழுவிக்கொண்டு போய்விடும். ஆனால், ராத்திரி உமிழ்நீர்ச் சுரப்புக் குறைவு. அதனால்தான் விடிந்து எழும்போது இந்த 'ஸ்மெல் எஃபெக்ட்’.
உண்மையான பற்களைத் துலக்காவிட்டால் எப்படி வாய் நாறுமோ அதேபோல, செயற்கைப் பற்களையோ அல்லது பல் செட்டோ வைத்திருப்பவர்கள், அதை முறையாகக் கழுவிச் சுத்தம் செய்யாமல் இருந்தாலும் வாய் நாற்றம் ஏற்படும்.
வாயில் புண் இருப்பது அல்லது ஈறுகளில் நோய்த்தொற்று இருப்பது ஆகியனவும் வாய் நாற்றத்துக்குக் காரணங்கள். இதேபோல, தொண்டை, நுரையீரல் போன்ற உறுப்புகளில் நோய்த் தொற்று இருந்தாலும்கூட வாய் நாறும். குடலில் புண் இருந்தாலும் மிகுந்த நாற்றம் அடிக்கும்.
இன்னொரு காரணம் வாய் உலர்ந்து போய்விடுவது. டாக்டரிடம் ஆலோசனை பெற்று சரியான மருந்து உட்கொண்டால் இது சரியாகிவிடும்.
மண்டல நோய்கள் (ஷிஹ்stமீனீவீநீ பீவீsமீணீsமீ) என்று சொல்லப்படும் சிறுநீரகம், இதயம், நரம்பு மண்டலம் சம்பந்தமான நோய்கள் இருந்தாலும் வாய் நாற்றம் அடிக்கும். நீரிழிவு நோய் இருந்தால் வாயில் நாற்றத்துடன் சேர்ந்து லேசாகப் பழ வாடையும் வரும். சிறுநீரக வியாதிகள் இருந்தால், லேசாகச் சிறுநீர் வாடை வீசும்!
வயிற்றில் குடற்புழுத் தொற்று இருந்தாலும் சிலருக்கு இந்தப் பிரச்னை இருக்கும். சில சமயம் தொண்டைப் பகுதியில் உள்ள சதை சற்று பலவீனம் அடையும்போது கட்டி ஒன்று தோன்றி, சிறிய பலூன் அளவுக்கு வளர்ந்து பின்னர் உடைந்தும்விடும். அதில் உணவுத் துணுக்குகள் சேரும்போதும் வாய் நாற்றம் ஏற்படும். வாயில் புற்றுநோய் ஏற்பட்டிருந்தாலும் நாற்றம் அடிக்க வாய்ப்பு உண்டு.
பொதுவாகவே நமக்கெல்லாம் ஒரு வழக்கம். பல்லில் ஏதாவது கோளாறு என்றால்தான் பல் மருத்துவரைப் போய்ப் பாப்போம். ஒரு தொந்தரவும் இல்லையென்றாலும்கூட வருடத்துக்கு ஒருமுறை பல் மருத்துவரைப் பார்த்துப் பரிசோதித்துக்கொள்வது நல்லது. இதன் மூலம் வாய் நாற்றம் ஏற்படக் கூடிய பல வியாதிகளை ஆரம்பத்திலேயே கண்டறிந்து குணப்படுத்திக்கொள்ள முடியும்.
நிறையத் தண்ணீர் குடிப்பது நல்லது. அடிக்கடி வாய்க் கொப்பளித்தும் துப்பலாம்.  சிறு தீனிகளை இடையே சாப்பிட்டாலும் வாய் கொப்பளிப்பது அவசியம்.
ஏலக்காயை மெல்வது தற்காலிகமான நிவாரணம் தரும். அங்கீகரிக்கப்பட்ட மவுத் வாஷ்களைப் பயன்படுத்தலாம்'' என்கிறார் நடராஜன்.
மேலே சொன்ன வழிகளை எல்லாம் கடைப்பிடித்தால், பொன் மலர் நாற்றமுடைத்து என்ற பழமொழிக்கு ஏற்ப விளங்குவீர்கள். கவனிக்க... நாற்றம் என்கிற வார்த்தைக்கான பழந்தமிழ் அர்த்தம் நறுமணம்!

No comments:

Post a Comment