Wednesday 18 April 2012

மருத்துவ சமையல்


ன்றைக்கு சில அடி தூரம் நடந்தாலே, பலருக்கும் முட்டி வலிக்கிறது; மூச்சு வாங்குகிறது. ஆனால், எந்த வாகன வசதியுமே இல்லாத அந்தக் காலத்தில் பல மைல் தூரத்தை நடந்தே கடந்து சென்றவர்கள் நம்முடைய முன்னோர். ஆரோக்கியமான உணவு வகைகளைச் சாப்பிட்டு வந்ததுதான் அதற்கான காரணம். மறந்துபோன மருத்துவ உணவுகளில் சில இங்கே...


ஆவாரம்பூ கஷாயம்
தேவையானவை: ஆவாரம்பூ - 100 கிராம், சுக்கு - ஒரு துண்டு, ஏலக்காய் - 20, உலர்ந்த வல்லாரை இலை - 100 கிராம், சோம்பு - ஒரு டீஸ்பூன்.
செய்முறை: மேற்சொன்ன அனைத்துப் பொருட்களையும் ஒன்றாகச் சேர்த்து, ஒன்றிரண்டாகப் பொடித்து வைத்துக்கொள்ளவும். தேவையானபோது அதில் கையளவு எடுத்து, அரை லிட்டர் தண்ணீர் ஊற்றி கால் லிட்டராக ஆகும் வரை சுண்டக் காய்ச்சவும். அதை வடிகட்டி, தேவையான அளவு பனை வெல்லம் அல்லது பனங்கற்கண்டு சேர்த்துக் குடிக்கலாம்.
மருத்துவப் பயன்: சர்க்கரை நோய்க்கு கைகண்ட மருந்து. சிறுநீர்க் கோளாறுகளை நிவர்த்தி செய்யும். இதய நோய், வாய்ப்புண், சரும நோய்களைப் போக்கும் ஆற்றல்கொண்டது. உஷ்ணத்தைக் குறைத்து உடலைக் குளிர்ச்சியாக வைத்துக்கொள்ளும்.

சாமை, தினை அரிசி அடை
தேவையானவை: சாமை, தினை அரிசி - தலா 100 கிராம், சின்ன வெங்காயம் - 50 கிராம், தக்காளி - 1, மிளகு - 20, சீரகம் - ஒரு டீஸ்பூன், இஞ்சி - சிறிய துண்டு, பூண்டு - 6 பல், மஞ்சள் தூள் - அரை டீஸ்பூன், கறுப்பு உளுந்து - 2 டீஸ்பூன், நல்லெண்ணெய், உப்பு - தேவைக்கு.
செய்முறை: சாமை, தினை, மிளகு, உளுந்து, மஞ்சள் தூள், சீரகம் ஆகியவற்றை வெறும் வாணலியில் இளவறுப்பாக வறுத்து, தூள் செய்துகொள்ளவும். வாணலியில் நல்லெண்ணெய் ஊற்றி, பொடியாக நறுக்கிய வெங்காயம், தக்காளி, இஞ்சியை நன்றாக வதக்கவும். வதங்கியதும் அரைத்துவைத்துள்ள மாவுடன் கலந்து, உப்பு சேர்த்துப் பிசையவும். இந்த மாவை தோசைக்கல்லில் அடையாகச் சுட்டு எடுக்க வேண்டும்.
மருத்துவப் பயன்: உடல் அசதி மற்றும் தளர்ச்சியைப் போக்கி சுறுசுறுப்பு தரும். எலும்புகளுக்கு ஊட்டம் அளிக்கும். இதைத் தொடர்ந்து சாப்பிட முதுகெலும்பு பலப்படும். குறிப்பாக, டூவீலரில் அடிக்கடி பயணம் செய்பவர்கள் இதைச் சாப்பிட, வாகனம் ஓட்டுவதால் ஏற்படும் முதுகு வலி குறையும்.

கற்றாழை அல்வா
தேவையானவை: சோற்றுக் கற்றாழை - கால் கிலோ, முந்திரி, பாதாம் பருப்பு - தலா 100 கிராம், சுக்கு - 20 கிராம், ஏலக்காய் - 25 கிராம், நாட்டு வெல்லம் - அரை கிலோ, நெய், தேன் - தலா 2 டீஸ்பூன்.
செய்முறை: தோல் நீக்கிய சோற்றுக் கற்றாழையை அரிசி கழுவியத் தண்ணீரில் சுத்தம் செய்துகொள்ள வேண்டும். ஒரு லிட்டர் தண்ணீரில் கற்றாழையைப் போட்டு வேகவைக்கவும். முந்திரி, பாதாம் பருப்பு, சுக்கு, ஏலக்காயை வெறும் வாணலியில் சிவக்க வறுத்துத் தூள் செய்து, கற்றாழையுடன் சேர்க்கவும். கற்றாழை நன்றாக வெந்ததும் வெல்லத்தை நன்றாகப் பொடித்து, அதில் சேர்க்கவும். அடிப்பிடிக்காமல் கிளறிக்கொண்டே இருக்கவும். அல்வா பதம் வந்ததும் நெய், தேனை ஊற்றி நன்றாகக் கிளறி கீழே இறக்கவும்.
மருத்துவப் பயன்: வெள்ளைப்படுதல், கருப்பைப் புண், பால்வினை நோய்களைக் குணப்படுத்தும். எலும்புருக்கி நோய்க்கு மிகச் சிறந்த மருந்து. உடல் உஷ்ணத்தைக் குறைத்து குளிர்ச்சியை உண்டாக்கும். பார்வைக் கோளாறுகளைச் சரிசெய்யும். குடல் கிருமிகளை அகற்றும். மெலிந்த தேகம் கொண்டவர்களுக்கு வலிமை தரும்.

முருங்கைக் கீரைக் கஞ்சி மாவு
தேவையானவை: பாசிப் பருப்பு, துவரம் பருப்பு, கறுப்பு உளுந்து - தலா கால் கிலோ, பச்சரிசி - ஒரு கிலோ, ஏலக்காய், சீரகம், மிளகு - தலா 25 கிராம், முருங்கைக் கீரை - ஒரு கட்டு.
செய்முறை: முருங்கைக் கீரையை ஆய்ந்து சுத்தப்படுத்தி, விழுதாக அரைத்துக்கொள்ளவும். மற்ற அனைத்துப் பொருட்களையும் ஒன்றாகச் சேர்த்து, அதில் அரைத்த கீரை விழுதை சேர்த்துப் பிசையவும். இதை இரண்டு நாட்கள் வெயிலில் நன்றாகக் காயவைக்கவும். காய்ந்ததும் மாவாக அரைத்துக்கொள்ளலாம். தேவையானபோது மாவை எடுத்து உப்பு சேர்த்துக் கஞ்சியாகக் காய்ச்சிக் குடிக்கலாம். மாவாக அரைக்காமல், அரிசியை ஒன்றிரண்டாக உடைத்தோ அல்லது அப்படியே கஞ்சியாகக் காய்ச்சியும் குடிக்கலாம்.
மருத்துவப் பயன்: மூட்டு வலி, கழுத்து வலி குணமாகும். இரும்புச் சத்து நிறைந்து இருப்பதால், ரத்தத்தில் உள்ள ஹீமோகுளோபின் எண்ணிக்கை அதிகரித்து ரத்த சோகை சரியாகும். மாதவிடாய்ப் பிரச்னையைத் தீர்க்கும். இளைத்த உடலைத் தேற்றும்.


No comments:

Post a Comment