Friday 20 April 2012

'தலைமறைவு' தனுஷ்... சிக்கிய ரஜினி..

 
ஜினி மகள் ஐஸ்வர்யா இயக் கத்தில் தனுஷ், ஸ்ருதிஹாசன் நடித்த '3’ படம் ஏகப்பட்ட எதிர்பார்ப்புகளுக்கு இடையே வெளியாகி, வந்த வேகத்திலேயே திரும்பியும் விட்டது. அதனால், விநியோகஸ்தர்களுக்கு பெருத்த நஷ்டம். படத்தை வாங்கி நஷ்டம் அடைந்த விநியோகஸ்தர்கள், தயாரிப்பாளர் கஸ்தூரிராஜா மீது 'கொலவெறி’யில் இருக்கிறார்கள்.

'ரஜினியிடம் சென்று முறை யிட்டால், 'பாபா’, 'குசேலன்’ மாதிரி நஷ்டஈடு கிடைக்கலாம்’ என்று பாதிக்கப்பட்டவர்கள் ஒன்று திரளத் தொடங்கினார்கள். இந்தத் தகவல் எப்படியோ ரஜினி காதுக்கும் போனது. உடனே விழித்துக்கொண்டவர், 'எனக்கும் '3’ படத்துக்கும் வியாபாரரீதியாக எந்தத் தொடர்பும் இல்லை’ என்று அவசர அவசரமாக அறிக்கை வெளியிட்டார்.
முன்னதாக, படம் பணால் என்று ரிசல்ட் தெரிந்ததுமே தனுஷ், ஹாங்காங் செல்வ தாகச் சொல்லிவிட்டு பாங்காக் பறந்துவிட்டாராம். எங்கே இருக்கிறார் என்ற தகவலே சொல்லாமல் இதுவரை தலைமறைவாக இருந்தவர், 'கோச்சடையான்’ படப் பிடிப்புக்காக ரஜினி கேரளா சென்ற தகவல் கிடைத்த பிறகே சென்னைக்குத் திரும்பி இருக் கிறார். ஆனாலும் யாரையும் சந்திக்கக் கூடாது என்று தனுஷின் செல்போன் ஸ்விட்ச்-ஆஃப் நிலையில் தான் இருக்கிறதாம். 
ஆந்திராவில் நாலரைக் கோடி ரூபாய்க்கு '3’ படத்தை வாங்கிய விநியோகஸ்தர் நட்டிக்குமாருக்கு நஷ்டம் மட்டுமே மூன்றரைக் கோடி என்கிறார்கள். ''சூப்பர் ஸ்டார் ரஜினியின் மகள் டைரக்ஷன் செய்கிறார். தனுஷ் சூப்பராகப் பாட்டு பாடியிருக்கார் என்று என்னை ஏமாற்றி '3’ படத்தை என்னிடம் அதிக விலைக்கு விற்றுவிட்டார்கள்...'' என்று நட்டிக்குமார் பார்ப்பவர்களிடம் எல்லாம் புலம்புகிறாராம்.
''தனுஷ் நடித்த, 'மயக்கம் என்ன’ படத்தின் கர்நாடக உரிமையை 50 லட்ச ரூபாய்க்கு வாங்கினேன். அதில் 20 லட்ச ரூபாய் நஷ்டமாச்சு. இப்போது '3’ படத்தைப் பற்றி ஏகத்துக்கும் பில்டப் கொடுத்து 2.5 கோடி ரூபாய்க்குத் தள்ளினார்கள். இப்போது இரண்டு கோடி ரூபாய் நஷ்டத்தில் தவிக்கிறேன்'' என்று கன்னட விநியோகஸ்தரும் கதிகலங்கி நிற்கிறாராம்.
கோவை, ஈரோடு, திருப்பூர், நீலகிரி மாவட்டத் திரைப் பட விநியோகஸ்தர்கள் சங்கத் தலைவர் திருப்பூர் சுப்ரமணியத்திடம் பேசினோம்.
''கோவை ஏரியாவுக்கு '3’ படத்துக்கு இரண்டரை கோடி ரூபாய் விலை சொன்னார் கஸ்தூரிராஜா. நான் ஒரு கோடிக்கு கேட்டேன், தரவில்லை. அதன்பிறகு, காஸ்மாஸ் வில்லேஜ் பிக்சர்ஸ் சிவக்குமார் '3’ படத்தை வாங்கினார். அவருக்கு இப்போது 50 லட்சம் நஷ்டம். படத்தை வெளியிட்ட 12 தியேட்டர் உரிமையாளர்களுக்கும் சேர்த்து 50 லட்சம் நஷ்டம். நான் 32 வருஷமா இந்தத் தொழிலில் இருக்கிறேன். இது வரை, ஒரு படத்துக்குகூட நஷ்டஈடு கேட்டது இல்லை. 'பாபா’வுக்குகூட ரஜினிதான் கூப்பிட்டுக் கொடுத்தார், வாங்கிக்கொண்டேன். அது மட்டும் அல்ல, தமிழ்நாட்டில் நஷ்டம் அடைந்த அத்தனை பேருக்கும் நயா பைசா பாக்கி வைக்காமல் நஷ்டத் தொகையை என்னை வைத்துத்தான் செட்டில் செய்தார் ரஜினி. அப்போது திருப்பிக் கொடுத்த பணம் மட்டும் சுமார் 15 கோடிக்கு ரூபாய்க்கு மேல் இருக்கும். அதன்பிறகு, 'குசேலன்’ பட நஷ்டத்தை ரஜினியிடம் மிரட்டி வாங்கினார்கள். 'என் சொந்தத் தயாரிப்பு 'பாபா’. அந்தப் படத்துக்கான நஷ்டத்தை அப்படியே திருப்பிக் கொடுத்தேன். 'குசேலன்’ படத்தில் நான் நடிக்க மட்டும்தான் செய்தேன். அந்தப் படத்தின் தயாரிப்புக்கும் எனக்கும் என்ன சம்பந்தம்? என்னிடம் பணம் கேட்டு நிற்கிறார்களே...’ என்று ரஜினி என்னிடம் கண் கலங்கினார்.
நஷ்டத்தை ரஜினியிடம் திருப்பிக் கேட்டவர்கள், அவர் படத்தை திரையிட்டு லட்சம் லட்சமாய் லாபம் சம்பாதித்தார்களே. அப்போது பங்கு கொடுத்தார்களா? இப்போது, ரஜினியிடம் பணம் வாங்க வேண்டும் என்று பேசியவர் ஆந்திர விநியோகஸ்தர்தான். அவர் எப்போதும் இப்படித்தான் ஏடாகூடமாகப் பேசுவார். ரஜினிக்கும் '3’ படத்துக்கும் என்ன சம்பந்தம்? எதுக்குத் தேவை இல்லாம அவரை வம்புக்கு இழுக்கணும்? '3’ படத்தை வாங்கச் சொல்லி விநி யோகஸ்தர்களிடம் வேண்டுகோள் விடுத்தாரா ரஜினி? அந்தப் படம் பெரிய வெற்றி பெறும் என்று நீங்களாகத்தானே விரும்பிப் போய் வாங்கினீர்கள்? எல்லாத் தொழிலிலும் லாபம், நஷ்டம் இரண்டும் உண்டு. அதற்கு சினிமா மட்டும் விதிவிலக்கல்ல...'' என்று விளக்கம் கொடுத்தார். 
ரஜினிக்கு சிக்கலாக மாறி இருக்கிறது '3’. இதில் இருந்து அவர் எப்படி வெளியில் வருவாரோ தெரியவில்லை!

No comments:

Post a Comment